அதிமுக தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? ஓபிஎஸ் சொல்வதை பாருங்க
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாக்களித்த நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்து இருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஆர்.பி. உதயக்குமார் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், தங்கமணி, செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், காமராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராஜன் செல்லப்பா, தனபால், ரவி, கேசி கருப்பணன், கே.பி. அன்பழகன் ஆகியோர் கொண்டு வந்தனர்.

அதிமுக தீர்மானத்திற்கு ஆதரவு
இதைத்தொடர்ந்து 11 மணியளவில் சபாநாயகர் அப்பாவு பேசினார். அப்போது அவர் கூறும் போது, "சட்டப்பேரவை தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான மனு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அளிக்கப்பட்டது. அது இன்று அலுவலுக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மீது அதனை கொண்டு வந்து உள்ள உறுப்பினர்கள் பேசலாம். எனவே சட்டப்பேரவை துணைத் தலைவரான பிச்சாண்டியை சபையை நடத்த வருமாறு அழைத்தார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தனது இருக்கையில் இருந்து எழுந்து சபையை விட்டு வெளியேறினார். துணை சபாநாயகரான பிச்சாண்டி, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார். தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். முதல்வர் மு.க ஸ்டாலினும் பதிலடி கொடுத்து பேசினார்.
ஓ பன்னீர் செல்வம் விளக்கம்
தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரித்து 63 பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். யாரும் நடுநிலை வகிக்கவில்லை. 91 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வாக்கெடுப்பில் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இதனிடையே, அதிமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:- "அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் கொறாடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக வாக்களித்தேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ் வாக்களித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சட்டப்பேரவை தலைவர் ஓ பன்னீர் செல்வத்திற்கும் சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் அவர் எதிர்த்து வாக்களித்து இருக்கிறார். இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றெல்லாம் கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications