’கேட்காமல் உத்தரவு பிறப்பிக்காதீங்க’ பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட் மனு
சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் மேல் முறையீடு செய்வதாக கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோஷம் வலுக்கத் தொடங்கியதும் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவியது. இந்த ரேசில் முந்திய எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி தனது பலத்தை நிரூபித்தார். மேலும் அதிமுகவை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அததோடு, ஓ பன்னீர் செல்வம், வைத்தலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது. இதற்கு எதிராக ஒ பன்னீர் செல்வம் தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தினார். அதன்படி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனுவை தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தரப்பினரின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிட முடியாது. எனவே, ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றது.
இதேபோல், கட்சியிலிருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட 4 பேரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கையையும் நிராகரிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். இதனிடையே தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று ஓ பன்னீர் செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் மேல் முறையீடு செய்வதாக கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக யாரேனும் மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications