சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம்! AQI அளவில் 200ஐ தாண்டியது!
சென்னை: இன்று நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கையில், சென்னையில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட மாசு காரணமாக, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்திருக்கிறது.
இந்து மக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. எனவே, பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே அரசு தரப்பில், பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், நேரக்கட்டுப்பாட்டு இல்லாமல் சிலர் பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதனால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் காற்றின் தரம் மிக மோசனமான அளவில் பதிவாகியிருந்தது. 2022 தீபாவளி அன்று மட்டும் சென்னைவாசிகள் சுமார் 32 சிகிரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு காற்று மாசடைந்திருந்தது. காற்று மாசை அளவிட AQI பயன்படுத்துவார்கள். இந்த அளவீட்டின்படி காற்று மாசு 200ஐ கடந்துவிட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தம். 2022 தீபாவளியன்று சென்னையில் பல இடங்களில் காற்று மாசு 700ஐ கடந்திருந்தது.
பொதுவாகவே காற்றில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன் நுண்துகள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு வெடிக்கும் பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன.
இன்றும் இதேதான் நடந்து வருகிறது. சென்னையில் இன்று மதியம் நிலவரப்படி 4 இடங்களில் காற்று மாசு 200ஐ கடந்திருக்கிறது. குறிப்பாக ஆலந்தூரில் 257ஆக காற்று மாசு பதிவாகியுள்ளது. இன்றும் நேரம் ஆக, ஆக காற்றின் தரம் மோசமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் இன்று காலை திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்தது. எனவே காற்றின் தரம் ஓரளவுக்கு குறைந்தது. மாலையிலும் இதேபோல மழை பெய்தால் காற்றின் தரம் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications