சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் ரஃபேல்.. விமான சாகசத்தை இலவசமாக காண ரெடியா! தேதியை நோட் பண்ணுங்க
சென்னை: இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில், போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட உள்ளன. மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சிகள் நடப்பது இதுவே முதல் முறை என்பதால் சென்னை மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
சர்வதேச அளவில் இந்திய விமானப்படை மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ரஷ்யாவிடமிருந்து நாம் வாங்கிய போர் விமானங்கள். அதாவது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த விமான படையை ரஷ்யா கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் விமானங்கள், இந்திய விமானப்படையின் தரத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

மட்டுமல்லாது, ரஷ்யா விமானங்களின் என்ஜினை இந்தியாவுக்கு ஏற்றார்போல நாம் மாற்றி அமைத்து பயன்படுத்தி வருகிறோம். ரஷ்யா அடிப்படையில் குளிர் பிரதேசம், எனவே இந்த சூழலில் சிறப்பாக இயங்கும் வகையில் விமானங்களை அந்நாடு வடிவமைத்திருக்கும். ஆனால், நம்முடைய நாட்டில் காஷ்மீரை தவிர மற்ற பகுதிகள் பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளாகும். எனவே, இந்த சூழலில் போர் விமானங்கள் சிறப்பாக இயங்க சில மாறுதல்களை இந்திய விமானப்படை செய்திருக்கிறது.
இரண்டாவதாக இந்தியாவுக்கு வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள். உலகமே அடேங்கப்பா என்று திரும்பி பார்க்கும் வகையில் ரஃபேல் விமானம் இருக்கிறது. இதனை இந்தியா சமீபத்தில் வாங்கியதன் மூலம் சீனாவுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இப்படி சர்வதேச அளவில் இந்தியா தனது விமானப்படையை சிறப்பாக கட்டமைத்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தனது விமானப்படையின் பலத்தை காட்டும் விதமாக, விமான சாகச நிகழ்ச்சிகளை விமானப்படை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் வழக்கமாக விமானப்படை தளங்கள் இருக்கும் பகுதியில்தான் நடத்தப்படும். உதாரணமாக கோவை சூலூர், தஞ்சை, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இது நடத்தப்பட்டு வந்தது. ஆனால், முதல் முறையாக தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்படுகிறது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னையில் அக்.8ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்திய விமானப்படையின் அணிவகுப்பு சென்னையில் காலை 7.45 மணிக்கு தொடங்கும். அணிவகுப்பை தொடர்ந்து மெரினா கடற்கரையில் பிரமாண்டமான விமான கண்காட்சி நடைபெறும். 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றிருந்தது. சென்னையில் முதல் முறையாக விமானப்படை கண்காட்சி நடைபெறுவதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இதில் ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கின்றன.
ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். இதனை பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.












Click it and Unblock the Notifications