Akshaya Tritiya 2025: அட்சய திருதியை இன்று.. இன்றைய நாளில் தங்கம் வாங்குவது ஏன் நல்லது? எந்த நேரத்தில் நகை வாங்கலாம்?
சென்னை: அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இன்று காலை 5.41 முதல் மதியம் 12.18 மணி வரை உள்ள 6 மணி நேரம் 37 நிமிடங்களில் அட்சய திருதியைக்கு தங்க நகைகள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் அவை பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அந்தவகையில் அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 29 ஆம் தேதியான நேற்று காலை 05:31 மணிக்கே திருதியை திதி துவங்கி விட்டது. ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று மதியம் 02:12 வரை திருதியை திதி உள்ளது. எனினும், ஏப்ரல் 30 ஆம் தேதியான இன்று தான் சூரிய உதய காலத்தில் திருதியை திதி உள்ளதால் இன்றைய தினமே அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை நாளான இன்று என்ன பொருட்கள் வாங்கினாலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் இந்த நாளில் தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மேலும், அட்சய திருதியை திதியில், சுப காரியங்களை துவங்க ஏற்ற காலமாகவும் கருதப்படுகிறது.
அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் காலை 05:41 மணி முதல் பிற்பகல் 02:12 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் தங்கம் வாங்கலாம். இன்று தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக நகைக்கடைகள் பல சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாவிட்டால், அந்த நாளில் உங்கள் ராசிக்கு ஏற்றவாறு மற்ற உலோகங்களை வாங்கலாம்.
புராண காலத்தில் சித்திரை மாதம் வளர்பிறையின் மூன்றாவது நாள் செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்றும், வேத காலங்களில் சான்றோர்கள் அட்சய திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்கள்.
அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளின் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் ஐதீகம். அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வில் வளம் பெருகும். மேலும் தங்கம், வெள்ளி வாங்குவது சிறந்தது எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications