வில்சனை கண்ணியக் குறைவாக நடத்திய விவகாரம்.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கம் மனு!
சென்னை: வழக்கு விசாரணைகளின் போது வழக்கறிஞர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதை தடுக்க வழிக்காட்டு நெறிமுறை உருவாக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக ராஜ்யசபா எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கம் மனு அளித்துள்ளது.
மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்.பியுமான பி.வில்சன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி வழக்கிற்காக ஆஜராகினார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி விக்டோரியா கவுரி, இருதரப்பு வாதங்களை கேட்டு, மனுதாரருக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். தனி நீதிபதி விக்டோரியா கவுரியின் உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி. ஆர் சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தனி நீதிபதியின் உத்தரவை மேல்முறையீடு செய்யும் போது அந்த வழக்கிலிருந்து தனி நீதிபதி விலக வேண்டும். ஆனால் இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியனுடன், தனி நீதிபதி விக்டோரியா கவுரியும் இருந்தார். வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், டிஎன்பிஎஸ்சி வழக்கில் நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டினார். ஆனால் நீதிபதி ஆர்.சுப்பிரமணியனோ, நீதிபதி கவுரியை இந்த வழக்கிலிருந்து வில்சன் விலக சொல்வதாக நினைத்துக் கொண்டு அவரை கோர்ட்டிலேயே அவதூறாக பேசியதாக தெரிகிறது.
வழக்கு விசாரணைகளின் போது Open கோர்ட்டில் நீதிபதிகள் கவனமுடன் பேச வேண்டும் என பலமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக, நீதிபதி ஆர் சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு மனு அளித்துள்ளது. அதில், அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த வழக்கறிஞர் பி. வில்சனை மரியாதைக் குறைவாக நடத்தினார்.
இவ்வாறு நீதிமன்ற விசாரணை அறைகளில் வழக்கறிஞர்கள் மரியாதை குறைவாக நடத்தப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வு நீதித்துறை நிர்வாகத்தை குறைத்து மதிப்பிடும் சூழலை உருவாக்கி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற காணொளி விசாரணை விதிகளின் படி, விசாரணை காட்சிகளை தரவிறக்கம் செய்வது, அதை பகிர்வது சட்டவிரோதமானது. ஆனால் மூத்த வழக்கறிஞர் வில்சனை நீதிபதி மரியாதை குறைவாகப் பேசிய வீடியோ தரவிறக்கம் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பரப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியான விடியோ குறித்து நீதித்துறை நிர்வாகம் அமைதியாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மாண்பு குறைக்கும் என்பதோடு மிகவும் ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, நீதிமன்ற விசாரணையின் போது வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் மரியாதையாக நடத்தப்படுவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும், காணொளி காட்சி விசாரணையை கண்காணிக்க தனி அமைப்பையும், வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நீதிமன்றங்களில் ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நீதிபதிகள் வழக்கறிஞர்களை சமமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications