உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக் கலப்பு! எதுவுமே ஒரிஜினல் இல்லை? என்ன கொடுமை சரவணன்?
சென்னை: இந்தியாவில் தயாராகும் அனைத்து பிராண்ட் உப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பல அதிரடி சோதனைகளை நடத்தி, உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் செய்துவரும் நிறுவனங்களையும் கெட்டுப் போன உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களையும் சீல் வைத்து வருகின்றனர். சில நாட்கள் முன்னதாக 800 கிலோ கெட்டுப் போன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

அதனை அடுத்து ஒருநாள் முன்னதாக குளிர்பானங்களில் எப்படி தரமற்ற ரசாயன பொருட்களை கலந்து விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் உயிருக்கு உலை வைத்து வருகின்றார்கள் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டி காட்டி இருந்தார்கள்.
தரமற்ற உணவுப் பொருட்கள் என்றால் அது சாலையோரங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களில் மட்டுமல்ல பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பொருட்களில் கூட கலந்திருக்கிறது என்பதை இப்போது வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டி இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
நேற்று வெளியான ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து பிராண்ட் உப்பு மற்றும் சர்க்கரை சமையல் பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸைக் துகள்கள் கலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ பாக்கெட்டுகளில் கிடைக்கும் பொருட்களில் மட்டுமல்ல, சில்லறையில் கிடைக்கும் சர்க்கரை மற்றும் உப்பில் இந்தத் துகள்கள் கலந்து விற்பனையாகி வருகின்றன.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பான டாக்ஸிக்ஸ் லிங்க் நடத்திய ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்று தெரிவித்துள்ளது இந்த அமைப்பு. இந்த ஆய்வுக்காக டேபிள் உப்பு, கல் உப்பு, கடல் உப்பு, உள்ளூரில் உற்பத்தியாகும் மூல உப்பு உட்பட 10 வகையான உப்பை இவர்கள் இந்தப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டுள்ளன. இதில் ஆன்லைன் மார்கெட் முதல் உள்ளூர் சந்தை வரை விற்பனையாகும் அனைத்திலும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் நுண் துகள்கள் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்ட அனைத்து வகையான உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளிலும் பல்வேறு வடிவங்களில் இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கலந்திருப்பது ஆய்வில் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவானது 0.1 மிமீ முதல் 5 மிமீ வரை கலக்கப்பட்டுள்ளதாக டாக்ஸிக்ஸ் லிங்க் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக்ஸின் மிக உயர்ந்த அளவுகள் அயோடைஸ்டு உப்பில், பல வண்ண மெல்லிய நார் மற்றும் ஃபிலிம்களின் வடிவத்தில் காணப்படுகின்றன. இது குறித்து டாக்ஸிக்ஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரவி அகர்வால் கூறுகையில், "எங்கள் ஆய்வின் நோக்கம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குறித்த அறிவியல் ரீதியான ஆபத்தை உணர்த்துவதாகும். இதன் மூலம் உலகளாவிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம், மேலும் அதன் அபாயம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்கிறார்.
இணை இயக்குநர் சதீஷ் சின்ஹா பேசுகையில், "எங்கள் ஆய்வில் அனைத்து விதமான பிராண்ட் உப்பு மற்றும் சர்க்கரை பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்தோம். அதில் கணிசமான அளவு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்தோம். மனித ஆரோக்கியத்திற்கு இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கேடு தரக்கூடியது. நீண்டகால உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடியது.
ஆகவே அவசரமாக ஒரு விரிவான ஆராய்ச்சிக்கு இது குறித்துச் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம்"என்கிறார். உப்பு மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவு ஒரு கிலோ உலர் உப்பில் 6.71 முதல் 89.15 துகள்கள் வரை இருப்பதாக இந்த ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, அயோடைஸ் உப்பில் அதிக அளவில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. அதவது ஒரு கிலோ கிராமுக்கு 89.15 துகள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கல் உப்பில் மிகக் குறைந்த அளவு இந்தத் துகள்கள் உள்ளன. அதாவது ஒரு கிலோ கிராமுக்கு 6.70 துகள்கள் உள்ளன.
அதேபோன்று ஆய்வு செய்த சர்க்கரை மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவு என்பது ஒரு கிலோ கிராமுக்கு 11.85 முதல் 68.25 வரை இந்தத் துகள்கள் கலந்துள்ளன. இயற்கை முறையற்ற சர்க்கரையில் அதிக செறிவு கலந்துள்ளது தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் கலப்பு என்பது உலகளாவிய அளவில் கவலை தரும் விசயமாக மாறி உள்ளது.
ஏனெனில் அவை ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர், காற்று மூலம் மனித உடலில் நுழையும் தன்மை கொண்டவை. நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளிலும், தாய்ப் பாலில்கூட இந்த மைக்ரோபிளாஸ்டிக் கலந்திருப்பதை சமீபத்திய ஆராய்ச்சியானது கண்டறிந்துள்ளது.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒரு இந்தியர் சராசரியாக ஒவ்வொரு நாளும் 10.98 கிராம் உப்பு, சுமார் 10 ஸ்பூன் சர்க்கரையை உட்கொள்கின்றனர். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள வரம்புகளை விட மிக அதிகம் என்பது அழுத்தமாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.












Click it and Unblock the Notifications