நெருங்கும் லோக்சபா தேர்தல்… சென்னையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனையை தொடங்கிய தேர்தல் ஆணையம்
சென்னை:லோக்சபா தேர்தல் குறித்து விவாதிக்க, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கி உள்ளது.
ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, லோக்சபா தேர்தலை முன்னிட்டு பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்காக தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் அரசியல் கட்சிகளின், வாக்குச்சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை கோரப்படுகிறது. அதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனையை தொடங்கி உள்ளார்.
அதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
கூட்டத்தை தொடர்ந்து, தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி முகாம், மறைமலைநகரில் நடக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 400 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இன்று வட மாவட்டங்களைச் சேர்ந்த 400 அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றும் ஊழியர்களை மாற்றும் பணியை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. அதுதொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 25ம் தேதிக்குள் அளிக்கப் படுகிறது.