இட்லியில் ஆரம்பித்த சிக்கல்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் அந்த பக்கம் பாஜக, இந்த பக்கம் பாமக!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு இட்லி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. மற்ற பொருட்களின் விலையை பற்றி கேட்க வேண்டியது இல்லை.. கிளாம்பாக்கம் உள்பட அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் என எல்லாமே கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படுகின்றன. தற்போது ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி, சென்னைக்குள் வராமல் நேராக கிளாம்பாக்கம் வந்து செல்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்போதிய அளவில் இரவில் பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், பெரும் சர்ச்சையானது.

இது ஒருபுறம் எனில் கிளாம்பாக்கத்தில் போதிய உணவகங்கள் இல்லை என்றும் ஏடிஎம்கள் போதிய அளவில் இல்லை என்றும், மலிவு விலை உணவகங்கள் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகருக்கு வெளியே கிளாம்பாக்கத்தில், அவசர அவசரமாக திறக்கப்பட்ட 'கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம்', சென்னை மாநகருக்கு வந்துச் செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.
கிளாம்பாகத்தில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பஸ் நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் மக்களின் பிரச்சினை ஓரளவுக்காவது குறையும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஒரு இட்லி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. மற்ற பொருட்களின் விலையை பற்றி கேட்க வேண்டியது இல்லை. கிளாம்பாக்கம் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பாஜக இப்படி என்றால்,பாமகவும் விமர்சித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று விமர்சித்தார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுப்பது நியாயமில்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போதிய வசதிகள் இல்லாமல், இணைப்புகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதை நேரடியாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்காக இதை பேசவில்லை.. இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications