“எடப்பாடி உடன் பேசும் திமுக கூட்டணி கட்சிகள்.. 2026ல் கணக்கு மாறும்” அடித்துச் சொல்லும் கோவை சத்யன்!
சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி கட்சிகள் இடம் மாறும் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கோவை சத்யன் பேசுகையில், "கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்ற வரலாறெல்லாம் திமுகவுக்கு கிடையாது. ஆனால், அதிமுக தனித்து நின்று ஆட்சி அமைத்த வரலாற்றைக் கொண்ட கட்சி. அதேசமயம், தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி வலுவான கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்திருக்கிறார்.

திமுக போல, கூட்டணி கட்சிகளுக்கு குடைச்சல் கொடுத்து, அவர்களின் அடையாளத்தையே தொலைக்க வைக்கும் கட்சி அதிமுக கிடையாது. கட்சிகளின் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டால் அவர்களுக்கும் அங்கீகாரம் இருக்கும். கட்டுண்டு கிடப்போம், வேற்றுமை பெரும், சமதளத்தில் இணைவோம் என்பது எங்கள் கொள்கைகளில் ஒன்று. கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக என்றைக்குமே வலுவான அங்கீகாரம் கொடுக்கும்.
விசிக மது ஒழிப்புப் போராட்டம் என நடத்த இருந்ததை மது ஒழிப்பு மகளிர் மாநாடாக மாற்ற திமுக அழுத்தம் கொடுத்தது. சிபிஐஎம் மாநில செயலாளர் திமுக அரசை விமர்சித்துப் பேசியதால் அடுத்த நாளே மாற்றப்பட்டார், காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டு 4 கட்சிகளுக்குச் சென்றவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அது தான் திமுக கொடுக்கும் அழுத்தம்.
கூட்டணி என்று வரும்போது கட்சிகளுக்கு ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். அதெல்லாம் திரைக்கு பின்னால் நடக்கும் தேர்தல் பேச்சுவார்த்தைகள். தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கும். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி கட்சிகள் இடம் மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், மாணவிகள் தன்னை அப்பா என்று அழைப்பதாக பேசி இருந்தார். அதனை விமர்சித்துள்ள அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், "சூடு சுரணை, மானம் இருப்பவர்கள் பிறரை அப்பா என்று சொல்லமாட்டார்கள்" என்று சொல்லி இருக்கிறாரே.. இது சரியா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோவை சத்யன், "சி.வி.சண்முகம் நாகரிக வரைமுறைக்குள் தான் பேசி இருக்கிறார்" என பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications