பாஜகவுக்கு நோ சொல்கிறதா தமாக.. 2 தொகுதிகள் தரும் கட்சியுடன் தான் கூட்டணியாம்.. யுவராஜா பரபர பேட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் தமாகா கட்சி சின்னத்தில் போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்’ என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், அக்கட்சியுடன் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை செய்து வருகிறது.

மறுபக்கம் அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. மெகா கூட்டணி அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் தாங்கள் எந்த பக்கம் செல்கிறோம் என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
பாஜக, அதிமுவுடன் இக்கட்சிகள் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது, லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் தமாகா கட்சி சின்னத்தில் போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்’ என்று கூறியுள்ளார். தாமரை சின்னத்தில் தான் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் கூறிய நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா இவ்வாறு அறிவித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவுடன் தேமுதிக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இந்த பேட்டியும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications