Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைந்துவிடும் நிலைக்கு சென்ற திமுக காங்கிரஸ் கூட்டணி.. கடைசி நேரத்தில் ஒப்பந்தம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், ஒருகட்டத்தில் கூட்டணியே முறியும் நிலைக்குச் சென்று பின்னர் பல அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து, நேற்று இரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இடையே என்னென்ன நடந்தது எனப் பார்க்கலாம்..

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வெகு தீவிரம் காட்டி வருகின்றன. வலுவான கூட்டணியை அமைத்துள்ள திமுக, தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

dmk congress tamil nadu assembly election 2026

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைவதால் அதற்குள் காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது திமுக. பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

முதலில் காங்கிரஸ் 41 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுக புதிதாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டி உள்ளதால் இந்த முறை 23 தொகுதிகள் தான் வழங்க முடியும், கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளுமே கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட குறைவான இடங்களிலேயே போட்டியிட உள்ளன என திமுக கூறியது.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை ஏற்க மறுத்து மீண்டும் கிரிஷ் சோடங்கரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சி 35க்கு கீழே எண்ணிக்கையைக் குறைக்க தயாராக இல்லை. இந்த கோரிக்கையை ஏற்பதற்கு திமுக மறுத்ததால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தது. 25 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்ததாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் சொன்ன பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறிவிட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணி முடிவை காங்கிரஸ் கட்சியிடமே திமுக விட்டு விட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைவதால், தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தமிழக கூட்டணி குறித்து டெல்லியில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முன்தினம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என காணொலி மூலம் கருத்து கேட்டுள்ளார். அதற்கு திமுக கூட்டணி தான் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த முறை தவெக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமமானது எனவும் கூறியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் திமுக ஆதரவு கருத்தை தெரிவித்ததால், திமுக தலைமையை சமாதானம் செய்யும் வகையில் இறுதிகட்ட முயற்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை நேரடியாக களத்தில் இறக்கினார் சோனியா காந்தி. முதல்வர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். தலைமையின் விருப்பத்தை அவர் எடுத்துரைத்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க திமுக இறங்கி வந்தது. ஆனால் 35 தொகுதிக்கு குறையக்கூடாது என ராகுல் காந்தி உறுதியாக இருந்துள்ளார். திமுக கூட்டணி தொடர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்பும் நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் திமுக - காங்கிரஸ் கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் ஆகியோர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக திமுக தெரிவித்ததை எடுத்து கூறி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் சொன்ன விஷயங்களையும் சோனியா காந்தியிடம் ப.சிதம்பரம் இரவோடு இரவாக கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொண்டது. எனினும், கொஞ்சம் போராடியாவது 30 இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று முயன்றது. நேற்று முன்தினம் இரவு செல்வபெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியாக தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். அதன்பிறகு கார்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இறுதியாக கனிமொழியும், சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, "முதல்வர் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிடலாம்" எனக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து காங்கிஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு வரும் என தகவல் வெளியானது. இதற்காக நேற்று மாலை 4.30 மணிக்கு கிரிஷ் சோடங்கர் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

அங்கிருந்து நேராக அறிவாலயம் புறப்பட தயாராக இருந்த நிலையில், அறிவாலயம் கிளம்ப தாமதம் ஆனது. மேலிடத்தில் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்று என்று கிரிஷ் சோடங்கர் தாமதப்படுத்தி கொண்டே இருந்தார். இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. வண்டி பனையூர் பக்கம் கிளம்பிவிடுமோ என்ற சலசலப்புகள் கூட எழுந்திருந்தன.

இதையடுத்து இரவு 7.30 மணி அளவில் புறப்பட்டு அண்ணா அறிவாலயத்துக்கு காங்கிரஸ் குழுவினர் வருகை தந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரும் அங்கு வந்தனர். பின்னர் இருதரப்பும் இறுதிக்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொகுதி பங்கீடு இறுதியானது. இதையடுத்து, திமுக - காங்கிரஸ் இடையே நேற்றிரவு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் திமுக தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தரப்பில் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 28 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென்றும், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து வலுவாக இருப்பதாக நிலவிய பேச்சுகளுக்கு மத்தியில் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கூட்டணி உடையுமா என்ற கேள்விகள் எழுந்திருந்தன. எனினும், ஒருவழியாக சுமூகமாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து 5வது முறையாக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+