பாஜகவுடன் கூட்டணியா? எல்லாம் போச்சே.. ஜெயிக்கிற வாய்ப்பும் பறிபோச்சே.. புலம்பும் திண்டுக்கல் அதிமுக!
சென்னை: பாஜகவுடனான கூட்டணி வைத்துவிட்டதால் இஸ்லாமியர்கள் கணிசமான வாக்காளர்களாக இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் சில தொகுதிகளில் சொந்த செல்வாக்கிலாவது ஜெயித்துவிட முடியும் என நம்பிய அதிமுக பிரமுகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் கணிசமான இஸ்லாமியர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர். ஒருகாலத்தில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு காயிதே மில்லத் மாவட்டம் என்று கூட பெயர் இருந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தை மேம்போக்காக பார்த்தால் திமுகவில் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, ஐ.பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார், அதிமுகவில் அக்கட்சியின் சீனியர்களும் மாநில கட்சி நிர்வாகிகளுமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் சீனிவாசன், டாக்டர் விபிபி பரமசிவம் என ஒரு பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் சொந்த செல்வாக்கு படைத்தவர்களாக இருப்பதால் தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பும் கொண்டவர்கள் என்பது கள நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக, அதிமுகவைப் பொறுத்தவரையில் 20, 30 ஆண்டுகளாக பார்த்து பழகிய முகங்கள்தான் கோலோச்சி வருவதால் இப்போதுதான் மெல்ல அடுத்த தலைமுறை தலையெடுக்கவும் தொடங்கி இருக்கிறது. திமுகவில் ஐபி செந்தில்குமார், அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன் மகன் ராஜ்மோகன், நத்தம் விசுவநாதன் மைத்துனர் கண்ணன், மாஜி துணை சபாநாயகர் மறைந்த விபிபி பாலசுப்பிரமணியத்தின் மகனும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலருமான மாஜி எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவம் என அடுத்த தலைமுறை அரசியல் திண்டுக்கல் மாவட்டத்தில் தயாராகத்தான் இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவும் அதிமுகவும் சம பலம் கொண்டவையாகவும் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் திமுக பலவீனமாக இருக்கக் கூடிய சில தொகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமான வாக்காளர்கள். இதனால் நேற்றுவரை 2026 சட்டசபை தேர்தலில் திமுகவின் பலவீனமான இந்த தொகுதிகளில் அதிமுகவே வெல்லும் என்கிற நம்பிக்கையும் இருந்து வந்தது. இதனை திமுகவினரும் உணர்ந்தே இருந்தனர்.
ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுமே 'உள்ளதும் போச்சுடா' என்ற கதையாகிவிட்டது அதிமுகவின் நம்பிக்கையாளர்களுக்கு. திமுகவினருக்கோ, படுத்துகிட்டே ஜெயிப்போம்யா என்கிற நிலைமைதான். ஆளும் திமுக மீது சில தொகுதிகளில் இருக்கிற அதிருப்தி, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவுடன் எளிதாக வெல்ல முடியும் என்கிற திண்டுக்கல் அதிமுகவினர் நம்பிக்கையில் டன் டன்னாக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் எடப்பாடியார் என அக்கட்சியினரே புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications