''கட்சி பெயரை வைத்து சம்பாதிக்கிறார் செல்வப்பெருந்தகை''! சத்தியமூர்த்தி பவனில் ரஞ்சன் குமார் ஆவேசம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி, பவனில் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமாருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த காங்கிரஸ் தலைவர் கக்ககின் 116வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் செய்திருந்தார்.

இந்நிலையில் விழா அழைப்பிதழில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பெயரை ஏன் போடவில்லை என்றும் அவரை ஏன் அழைக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய அவரது ஆதரவாளர்கள் கே.எஸ்.அழகிரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து விழா ஏற்பாட்டாளரான ரஞ்சன் குமார், கட்சி பெயரை வைத்து சம்பாதிக்கிறார் செல்வப்பெருந்தகை என்றும் தாமே அழைத்தும் அவர் வரவில்லை எனவும் பதிலடி கொடுத்தார். இதனால் வார்த்தைப் போர் முற்றி சத்தியமூர்த்தி பவன் ரணகளமானது. கோஷ்டிப் பூசலில் அடிதடி நிகழ்ந்துவிடுமோ என அஞ்சிய அழகிரி வேகமாக தனது அறைக்கு சென்றுவிட்டார்.
அங்கே இதாயத்துல்லா உள்ளிட்டோர் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்ட கே.எஸ்.அழகிரி, சத்தியமூர்த்தி பவனிலிருந்து புறப்பட்டுச் சென்றார். நகமும் சதையும் போல் தமிழக காங்கிரசும், கோஷ்டிப் பூசலும் பிரிக்க முடியாத இடத்தில் இருக்கிறது.
செல்வப்பெருந்தகை தரப்புக்கும் , ரஞ்சன் குமாருக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே செல்வப்பெருந்தகையை புறக்கணித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்களில் சிலர் பேட்டி கொடுக்க முயன்றதும் அவர்களுக்குள்ளேயே சிலர் பேட்டியெல்லாம் வேண்டாம் என தவிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications