"டிராவிட்".. அடித்து ஆடுவோம்.. அதிமுகவை கடுமையாக தாக்கியது ஏன்? அமர் பிரசாத் EXCLUSIVE விளக்கம்
அண்ணாமலை கட்சித்தலைவர். அவரை பற்றி பேசிவிட்டு பாஜக கூட்டணியான அதிமுகவிலேயே எப்படி இணைய முடியும் என்று அமர் பிரசாத் கேட்டுள்ளார்.
சென்னை: எங்கள் மாநில தலைவரை தவறாக பேசினால் நான் கருத்து சொல்லுவேன். நான் கோபம் அடைவேன். நான் ரியாக்ட் செய்தது என்னுடைய ஸ்டைல், என்று பாஜக அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல்கள் இருந்து வந்தது. பாஜகவில் இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு, என்று அண்ணாமலையை விமர்சனம் செய்து நிர்மல் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது. அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுகவிற்கு எதிரான தனது கருத்து குறித்து அமர் பிரசாத் ரெட்டி ஒன்இந்தியா யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், எனக்கு என் கட்சித்தான் முக்கியம். எனக்கு என் கட்சி.. என் தலைவர்.. என் பிரதமர் முக்கியம். என் கட்சியை பற்றி தவறாக பேசினால் அதை நான் கண்டிப்பாக எதிர்ப்பேன். நான் திராவிட கட்சிகளை தீவிரமாக எதிர்க்கிறேன். கூட்டணி என் கட்சியின் முடிவு. ஆனால் திராவிட கொள்கையை நான் எதிர்க்கிறேன். அதிமுகவை மட்டும் நான் விமர்சனம் செய்யவில்லை. கட்சி தலைவரை விமர்சனம் செய்துவிட்டு கூட்டணி கட்சியிலேயே சேருவது தவறு. ஸ்டாலினை மோசமாக விமர்சனம் செய்துவிட்டு ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியுமா? திமுகவினர் கொதித்து இருப்பார்களே.. அப்படித்தான் அண்ணாமலையை பேசிவிட்டு அதிமுகவில் எப்படி இணைய முடியும்.

அண்ணாமலை
அண்ணாமலை கட்சித்தலைவர். அவரை பற்றி பேசிவிட்டு பாஜக கூட்டணியான அதிமுகவிலேயே எப்படி இணைய முடியும். அதிமுகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நிர்மல் போட்டோவை போடுகிறார்கள். நிர்மல் அண்ணாமலையை விமர்சனம் செய்து 1 மணி நேரத்தில் இப்படி செய்கிறார்கள். இதை பிளானா இல்லையா என்றெல்லாம் சொல்ல முடியாது. அது நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் இந்த விவகாரம் எங்கள் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நான் கொடுத்த ரியாக்சன் சரியானதே. அது என் முடிவு. என் தர்மம். நான் சொன்னதெல்லாம் என்னுடைய கருத்து. வெற்றி தோல்வி ஒரு கட்சிக்கு முக்கியம் கிடையாது. கொள்கை மட்டுமே முக்கியம்.

மதிப்பு
ஒரு கட்சியின் சுயமரியாதை மதிப்புதான் முக்கியம். இது ஒன்னும் கார்ப்பரேட் நிறுவனம் கிடையாது. இது கட்சி. இது ஒரு உணர்வு. எங்கள் மாநில தலைவரை தவறாக பேசினால் நான் கருத்து சொல்லுவேன். நான் கோபம் அடைவேன். நான் ரியாக்ட் செய்தது என்னுடைய ஸ்டைல். எனக்கு அடித்து ஆடவே தெரியும். நான் சின்ன வயசில் இருந்து அடித்து ஆடி இருக்கிறேன். நான் ராகுல் டிராவிட் போல டொக் வைத்து ஆட மாட்டேன். கட்சி பொறுப்பு எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. எனக்கு தீவிர அரசியல் செய்யவே பிடிக்கும். நான் விளையாட்டு பிரிவில் சிறப்பாக செயல்பட்டதால்தான் திமுகவில் விளையாட்டு பிரிவு உருவாக்கி உள்ளனர்.அப்போது அடித்து ஆடுகிறேன் என்று தானே அர்த்தம்.

தலைவர்
அண்ணாமலை தலைவர் சரியாக எனக்கு பதவி கொடுத்துள்ளார் என்று தானே அர்த்தம். என் போஸ்டுகள் எல்லாம் என் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. நான் கொஞ்சம் குறைவாக கோபம் அடைந்து இருக்கிறேன். நான் இன்னும் கோபம் அடைந்து இருக்க வேண்டும். என் தலைவரை திட்டுகிறார்கள். காங்கிரஸ் - ஸ்டாலினை எடுத்துக்காட்டு சொன்னது உங்களுக்கு புரிஞ்சி இருக்கும். எடப்பாடி புகைப்படத்தை எரித்தது தவறுதான். ஒரு தம்பி அவசரப்பட்டு செய்துவிட்டார். அவரை கைதும் செய்துவிட்டனர். அது தவறுதான், என்று அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications