புழல் சிறையில் 2000 பேருக்கு ஒரு கிச்சன்.. 120 கைதிகளுக்கு ஒரு டாய்லெட்! அமர் பிரசாத் ரெட்டி புகார்
சென்னை: புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் கொடிக் கம்பம் 50 அடி உயரத்தில் நடப்பட்டது. இது விதிகளுக்கு புறம்பானது என கூறிய போலீஸார் இந்த கொடி கம்பத்தை அகற்றினர்.

அப்போது பாஜகவினர் அண்ணாமலை வீடு முன்பு ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவரான அமர்பிரசாத் ரெட்டியும் போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். அண்ணாமலையின் வலது கரம் அமர்பிரசாத் ரெட்டியும் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக ரெட்டி மீது புகார் இருந்தது.
அது போல் வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின் போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கு, தென்காசி மாவட்டத்தில் நடந்த என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சியின் போது பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு என 3 வழக்குகளின் கீழ் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த 3 பிரிவுகளின் கீழ் உள்ள வழக்குகளில் செஸ் ஒலிம்பியாட், தென்காசி வழக்குகளில் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 2000 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட வேண்டிய இடத்தில் 2910 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
500 பேருக்கு ஒரு சமையலறை என இல்லாமல் மொத்தமாகவே ஒரே ஒரு சமையலறையில்தான் உணவு சமைக்கப்படுகிறது. 10 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை என்ற விதியை மீறி 120 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை உள்ளது. உளவுத் துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் நான் அரசியலில் இருந்து விலகுமாறு மிரட்டுகிறார்கள் என தனது ஜாமீன் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதையேற்று வழக்கு விசாரணை நவம்பர் 10 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications