இஸ்லாமியர்கள் குற்றப் பரம்பரையா? எஸ்கேவின் அமரனுக்கு வந்த சிக்கல்! தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதை அடுத்து அமரன் திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரணம் மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் சேர்ந்து கேப்டனாகவும், மேஜராகவும் உயர்ந்தார்.

தொடர்ந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கு உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்ட்ரிய ரைபிள் குழுவில் இணைந்தார். தொடர்ந்து பல சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களை நிகழ்த்தியிருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன்.
2013இல் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான அல்தாப் பாபாவை சுட்டு வீழ்த்தும் குழுவில் முக்கிய பொறுப்பாற்றி இருந்தார். அதற்கு முன்னதாக லெபனான் சென்ற ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையிலும் பணியாற்றியவர் தான் மேஜர் முகூர்த்த வரதராஜன். ஏப்ரல் 2014 இல் காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார்.
தொடர்ந்து முகுந்த் வரதராஜனுக்கு இந்திய அரசின் மிக உயர்ந்த அமைதி கால வீர விருதான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் படமாக வந்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளி வந்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் முதல் நாளிலேயே சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதோடு, தற்போது 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் படத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டினர்.
அதே அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற சங்பரிவார எண்ணத்தை வழிமொழியும், உண்மைகளை மறைக்கும் திரைப்படமாக உள்ளது என இஸ்லாமிய அமைப்புகளும், எஸ்டிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் அந்த படத்தை திரையிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் இன்று தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் முற்றுகை போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தியேட்டர் நுழைவாயில்கள் மற்றும் பிற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications