3ஆம் அலை வார்னிங்..! தமிழகத்தில் குழந்தைகளிடம் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. ஏன் ஆபத்தானது
சென்னை: கொரோனா 3ஆம் அலை பற்றிய செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகக் குழந்தைகளிடம் ஏற்படும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது.
அதேபோல தினசரி உயிரிழப்புகளும் கட்டுக்கடங்காமல் சென்றது. பல வாரங்களுக்குப் பின்னரே, நாட்டில் கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ளது.

கொரோனா 2ஆம் அலை
கொரோனா 2ஆம் அலை இப்போது தான் கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலுமே தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிற மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள், பள்ளிகள் திறப்பு ஆகியவை குறித்து முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், 3ஆம் அலை குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. குறிப்பாக, 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகள்
அதற்கேற்றார் போல தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாகவே குழந்தைகள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பான 20,326இல் வெறும் 6% மட்டுமே சிறார்களிடம் ஏற்பட்டிருந்தது. ஆனால் 2ஆம் அலையின் போது சிறார்கள் மத்தியிலான பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாட்டில் 2ஆம் அலை உச்சத்திலிருந்த கடந்த மே மாதம் மட்டும் 71,555 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த வந்த மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், ஒட்டுமொத்த பாதிப்பில் சிறார்களின் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த ஜூன் மாதம், ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 8.8% பேர் சிறார்கள் ஆகும். ஆனால் இது ஜூலை மாதம் 9.5%ஆகவும், ஆகஸ்ட் மாதம் 10%ஆகவும் அதிகரித்துள்ளது. அதேநேரம் கொரோனாவால் சிறார்கள் மருத்துவமனைகளில் அனுமதியாவது அதிகரிக்கவில்லை.

பெரியளவில் அதிகரிக்கவில்லை
இது குறித்து குழந்தை தீவிர சிகிச்சைக்கான மாநில நோடல் அதிகாரி டாக்டர் சீனிவாசன் கூறுகையில், "3ஆம் அலை சமயத்தில் ஒட்டுமொத்த பாதிப்பில் 12% பாதிப்பு சிறார்கள் மத்தியில் ஏற்படும் என அரசு கணித்துள்ளது. அவர்களிலும் 5% குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படும். அதேபோல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறார்கள் அனைவரும்கூட மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். சென்னையில் இதுவரை 4 % சிறார்கள் வரை மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்ன காரணம்
லேசான அறிகுறிகள் தென்படாத கொரோனா பாதிப்பு சிறார்கள் மத்தியில் அதிகமாக இருக்கலாம். இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு அதிகரித்ததைப் போல தோன்றலாம். பொதுவாகவே 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு நாம் வேறு தடுப்பூசிகள் அதிகமாக அளிப்போம். இதனால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவர்கள் 10 வயதைத் தாண்டும்போது, இந்த நோயெதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். இதனால் வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். கடந்த ஒரு வாரமாகவே 10 வயதைக் கடந்த ஒரு குழந்தை தினமும் மருத்துவமனையில் அனுமதியாவதைப் பார்க்க முடிகிறது" என்று அவர் தெரிவித்தார்.

உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் 24 குழந்தைகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஜூனில் 13 குழந்தைகள். மே மாதம் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், "பெரும்பாலும் குழந்தைகளை கொரோனா நேரடியாகக் கொல்வதில்லை. புற்றுநோய் போன்ற தீவிரமான இணை நோய் உள்ள குழந்தைகளே உயிரிழக்கின்றனர். சிறார்களுக்கான வேக்சின் பயன்பாட்டிற்கு வரும்போது. கொரோனா உயிரிழப்புகள் மேலும் குறையும்" என்றார்.

கொரோனா சிகிச்சை
தமிழ்நாட்டில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 15,000 மருத்துவர்கள், 30,000 செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1100 அரசு மருத்துவமனைகள், 2300 தனியார் மருத்துவமனைகளில் சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications