கொரோனா ஊரடங்கு முதல் நாள்.. சென்னையில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்.. முக்கிய சாலைகள் வெறிச்சோடின
சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகத் தலைநகர் சென்னையில் மக்கள் வீடுகளில் முடங்கியதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 நெருங்குகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் வரும் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாகச் சென்னையில் உள்ள சாலைகள் வாகன போக்குவரத்து, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. முழு ஊரடங்கு முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யச் சென்னையிலுள்ள முக்கிய, இணைப்பு சாலைகளில், போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பொருட்கள், விவசாய விளை பொருட்களுடன் வந்த வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட்டது. ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. பெட்ரோல் பங்க், மருந்துக் கடைகள் வழக்கம் போலச் செயல்பட்டன. சென்னையில் பெரும்பாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவில்லை.
இருப்பினும் சென்னையை முக்கிய இடங்களில் வாகன போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது. வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாருடன், ஒரு சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைக்காகவே வெளியே வந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
முழு ஊரடங்கில் பொதுமக்கள் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கு சமயத்தில் மக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications