அச்சுறுத்தல்.. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி பரபர மனு!
அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை: கடந்த ஆண்டு சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடிபழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் அதிமுகவில் பொதுச்செயலாளரரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள் அச்சுறுத்தல் உள்ளது எனக்குறிப்பிட்டு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இவர் அதிமுக பொதுச்செயலாளராக விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார் என அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26ல் தேர்தல்
அதன்படி பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (மார்ச் 18) துவங்கி நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது. நாளை மறுநாள் (19ம் தேதி) பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். மார்ச் 20ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. மார்ச் 21ம் தேதி பிற்பகல் 3ம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அதன்பிறகு மார்ச் 26ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு
மார்ச் 27ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். இருப்பினும் இந்த தேர்தலில் வேறு யாரும் போட்டியிடமாட்டார்கள் என கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாதுகாப்பு கோரி மனு
இந்நிலையில் தான் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி ராயப்பேட்டை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முந்தைய மோதலால் பதற்றம்
முன்னதாக அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அலுவலக கதவு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதையடுத்து கலவரம் ஏற்பட்டு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து சீல் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி கட்சி தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் அதுபோன்ற மோதலை தடுக்கும் நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் போலீசில் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications