பீதியில் மக்கள்.. பயமின்றி பொது இடத்தில் நடக்கும் குற்றங்கள்.. சாட்டையை சுழற்றுமா தமிழக போலீஸ்?
சென்னை: சட்டம் -ஒழுங்கிற்கு பெயர் பெற்ற நம் மாநிலத்தில் தற்போது தொடர்ந்து பொது இடங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ள நிலையில் அரசு மீதும், போலீஸ் மீதும் பலரும் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக போலீஸ் அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
தமிழகம்.. சட்டம் - ஒழுங்கு எப்போதும் கட்டுக்குள் இருக்கும் மாநிலமாகும். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்து வரும் செயல்கள் என்பது மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கு பொது இடங்களில் நடந்து வரும் அடுத்தடுத்த குற்றச்சம்பவங்கள் தான் காரணம்.

உதாரணமாக சென்னை கிண்டி மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது, வேலூரில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்தது , இன்று தஞ்சாவூரில் அரசுப் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ரமணியை, மதன் குமார் என்பவர் குத்தி கொன்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர் கண்ணனை வெட்டியது, மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து பாலியல் அத்துமீறல் செய்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாம் கூறி கொண்டே செல்லலாம்.
பொதுவாக குடும்ப பிரச்சனை, முன்விரோதத்தில் அவ்வப்போது வெட்டு, குத்து, கொலைகள் நடக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக பொது இடங்களிலேயே குற்ற செயல்களில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரின் பின்னணியையும் பார்த்தால் அவர்கள் சாதாரண பின்பிலம் கொண்டவர்கள் தான். இதனால் தான் பொதுவாக ஒருவரை ஆத்திரத்தில் அடிக்கவே பலரும் பயப்படும் சூழலில் இவர்கள் பொது இடத்தில் கத்தியை வைத்து குத்தியும், பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டு உள்ளது எப்படி? என்ற கேள்வி இயல்பாகவே நம் மனதில் எழலாம்.
இதற்கு ஒருவரியில் பதில் சொல்ல வேண்டும் என்றால் போலீஸ் மீது பயம் இல்லாதது தான் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதாவது யூடியூபர் இர்பான் தனக்கு பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டினார். அவர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை என்பது போலீஸ் சலுகை காட்டுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அதோடு அரசியல் வட்டாரத்தில் தொடர்பு இருந்தாலோ அல்லது செல்வாக்கு மிக்க நபரின் தொடர்பு இருந்தாலோ எளிதாக போலீசிடம் இருந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றி உள்ளதா? என்ற வினாவையும் எழுப்புகிறது.
இதுதவிர பலரை போலீசார் கைது செய்தாலும் கூட உடனடியாக அவர்கள் அடுத்த சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்து சாதாரணமாக நடமாடி வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த சில நாட்களாக நடக்கும் குற்றங்கள் தான் தற்போதைய தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. பலரும் தமிழக அரசையும், தமிழக போலீசாரையும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த விமர்சனத்தை வெறும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு என்று இப்போதும் தமிழக அரசு மற்றும் போலீசாரால் கடந்து செல்ல முடியாது.
ஏனென்றால் மருத்துவமனை, பள்ளி, சாலைகள் என்று பொதுவெளியிலேயே குற்றங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு வந்த பயத்தை தான் விமர்சனமாக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு காவல்துறை மீது பொதுமக்களுக்கான பயம் என்பது இல்லை என்ற கேள்வியையும் இந்த குற்றச்செயல்கள் ஏற்படுத்தி விடுகிறது.
இப்படியான சூழலில் மக்களின் பயத்தை போக்கி, சட்டம் ஒழுங்கு நிலவரத்தை பேணிக்காப்பது தமிழக அரசு மற்றும் போலீசின் தலையாய கடமை. இதனை தமிழக போலீசாரும், முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்து தமிழகத்தில் எந்த பகுதியில் யார் குற்றம் செய்தாலும் கூட அதுபற்றி விசாரித்து சட்ட நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக யார் குற்றம் செய்தாலும், அவர் எத்தகைய பின்ணனியில் இருந்தாலும் எந்தவித சலுகை காட்டாமல் போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்பது தான் பலரின் விருப்பமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள பலரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications