இழுபறி முடிவுக்கு வருகிறது.. இறங்கி வரும் மதிமுக.. 1+1 பார்முலாவிற்கு ஒகே சொன்ன திமுக?
சென்னை: திமுகவுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால், மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவிடம் ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே திமுகவும் மதிமுகவிற்கு 1+1 பார்முலாவிற்கு ஒகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் 6 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறது.
விசிக, 2 கட்ட பேச்சுவார்த்தையிலும் கடந்த முறை தரப்பட்ட 2 தனித் தொகுதிகளுடன் இந்த முறை 1 பொதுத்தொகுதியும் வேண்டும் என்பதுடன் தங்கள் சின்னத்திலேயே போட்டி என்பதில் உறுதியாக உள்ள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது. அதேபோல் மதிமுகவும், கடந்த முறை தரப்பட்டதுபோல் ஒரு மாநிலங்களவை, ஒரு லோக்சபா தொகுதி மற்றும் சொந்த சின்னத்தில் போட்டி என்பதில் தீவிரமாக உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாத நிர்பந்தத்தில் திமுக தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மதிமுக தனது கோரிக்கையில் விடாப்படியாக இருப்பதாகவும், பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமுகவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி நீடித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில்தான் சென்னையில் மதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகோ அர்ஜுனராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் மதிமுக நிர்வாக குழு அவசர ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் வெற்றி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வது எனவும் தீர்மனாம் நிறைவெற்றப்பட்டது. இதேபோல், ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் திமுகவிடம் கேட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திமுக ஒதுக்கும் தொகுதியில் மதிமுக போட்டியிடும் என்றும், பம்பரம் சின்னத்தில் அல்லது தனி சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே திமுகவும் மதிமுகவிற்கு ஒரு லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கீடு செய்ய சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக - மதிமுக இடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வரும் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications