தமிழிசையை அமித்ஷா கண்டித்தாரா? மேடையில் என்ன நடந்தது.. அண்ணாமலை கொடுத்த பரபர விளக்கம்
சென்னை: அமித்ஷா பேச்சு பாசம்தான். எங்க கிட்ட பேசும் போதும் அப்படித்தான் பேசுவார்.. எல்லாரிடமும் அப்படித்தான் அமித்ஷா பேசுவார். அமித்ஷாவை பொறுத்தவரை அது பாசம் மட்டும் தான்.. எங்கேயுமே கண்டிக்க மாட்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித்ஷா மேடையில் பேசியது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதப்பொருளாகி வருவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:-

அண்ணாமலை விளக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கட்சியின் மூத்த தலைவர். பெரிய தலைவர். 5 ஆண்டு காலம் கட்சியின் மாநில தலைவராக கடுமையாக போராடினார். அப்போது சூழல் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும். அதன் பிறகு இரண்டு மாநில ஆளுநராக பணியாற்றியிருக்கிறார். தமிழிசை தனிப்பட்ட முறையில் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
தமிழிசை வீட்டிற்கு சென்றேன்: தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று அவரே கேட்டுக்கொண்டார். அதன்பிறகு கட்சியில் சீட் கொடுத்து தென் சென்னையில் போட்டியிட்டார். அதனால் தமிழிசை கட்சியில் மிகப்பெரிய உயரத்தில் உள்ளார். மேடையில் இரண்டு தலைவர்கள் பேசிய வீடியோவுக்கு பல விளக்கம் கொடுக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை இது ஒரு குடும்பம்.
அமித்ஷா எல்லோரையும் குடும்பமாகத்தான் பார்ப்பார். பாஜகவில் ஏற்றம் இறக்கமாக யாரயையும் பார்க்க போவது கிடையாது. அதனால்தான் தமிழிசையை இன்று வீட்டிற்கு சென்று சந்தித்து விட்டு வந்தேன். இந்த கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தலைவராக இருந்தார். இருக்கிறார்.. இருக்க போகிறார். அதனால் யூகத்திற்கு எந்த விதமான வேலையும் கிடையாது.
அன்போடு தான் பேசுவார்: அந்த உரையாடல் கண்டிப்பா.. பாசமா என்று கேட்கிறீர்கள். அது பாசம். அமித்ஷா பேச்சு பாசம்தான். எங்க கிட்ட பேசும் போதும் அப்படித்தான் பேசுவார்.. எல்லாரிடமும் அப்படித்தான் அமித்ஷா பேசுவார். அமித்ஷாவை பொறுத்தவரை அது பாசம் மட்டும் தான்.. எங்கேயுமே கண்டிக்க மாட்டார். காரணம் அவரும் பாஜகவின் ஒரு கார்யகர்த்தாதான். இங்கே வந்து பெரியவர்கள் சின்னவர்கள்..
பயந்து போய் இருக்க வேண்டும்.. தான் கை கட்டி நிற்க வேண்டும்.. என்ற கலாசாரம் பாஜகவில் கிடையாது. அமித்ஷாவின் பேச்சு என்பது அன்பு, அரவணைப்புதான். அதை தமிழிசையும் அமித்ஷாவிடம் அன்போடுதான் பேசினார். இதை பெரிதுபடுத்துவதில் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
கண்டித்தாரா அமித்ஷா: முன்னதாக விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின் போது தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித்ஷா இறுக்கமான முகத்துடன் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின. தமிழக பாஜக தலைவர் குறித்து தமிழிசை விமர்சிக்கும் விதமாக பேசியதை அமித்ஷா கண்டித்தாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து கூறினர்.
தமிழிசை சவுந்தரராஜன்: இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: " உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்தேன். அப்போது அவர் தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார். மேலும், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பான தேவையற்ற யூகங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைப் பதிவிட்டுள்ளேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications