பொங்கல் பண்டிகை நாளில் சென்னைக்கு வரும் அமித்ஷா: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு முடிவாகுமா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் சென்னை வர திட்டமிட்டுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மத்திய உள்துறை அமித்ஷா தை பொங்கல் திருநாளில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துக்ளக் பத்திரிகை விழாவில் பங்கேற்கும் அமித்ஷா அதிமுக, பாஜக இடையேயான தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்திருந்தார். அப்போது கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா பங்கேற்ற போது அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானது. மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் பாஜக உடன் கூட்டணி தொடருவதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை கட்சி தலைமைதான் அறிவிக்கும் என்று எல்.முருகன் உள்பட பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழாவில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகிறார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக- பாஜக இடையே கருத்து மோதல்கள் நிலவும் நிலையில் அமித்ஷா வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நாளில் அதிமுக பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று பேசி முடிவு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து அமித்ஷா நேரில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலுக்கு வரப்போவதில்லை கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் தர வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications