திடீரென போக்குவரத்தை நிறுத்திய போலீசார்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் மிக கடுமையான டிராபிக்! என்ன காரணம்
சென்னை: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் சென்னை வந்தனர். முக்கிய பிரமுகர்களின் வருகையால் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தது. இதனால் மீனம்பாக்கம் விமான நிலையம், பல்லாவரம் என ஜிஎஸ்டி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டின் 13ஆவது குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் வெங்கையா நாயுடு. 2017ம் ஆண்டு முதல் 2022 வரை இவர் குடியரசு துணைத் தலைவராக இருந்தார். கட்சி பாராமல் அனைத்து தரப்பினரிடமும் நட்பு பாராட்டுபவர் வெங்கையா நாயுடு.

வெங்கையா நாயுடு இல்ல திருமண விழா
இதற்கிடையே வெங்கையா நாயுடுவின் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் சென்னை வந்த நிலையில், இதனால் மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதாவது வெங்கையா நாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்கக் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று 7 மணி அளவில் தனி விமான மூலம் சென்னை வந்தார். இவர்களது வருகையையொட்டி மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருந்தது.
டிராபிக் பாதிப்பு:
மேலும், தனி விமானம் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருந்து விஐபி கேட் வழியாக வெளியேறும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. ஜிஎஸ்டி சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ஜிஎஸ்டி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாக்குவாதம்:
விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து குரோம்பேட்டை வரை சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து நின்றன. அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையால் சைதாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. 1 மணி நேரமாகக் காத்திருந்த பொதுமக்கள் சாலையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய பிரமுகர்கள் சென்ற பிறகு வாகனங்களைச் செல்ல போலீசார் அனுமதித்தனர். இருப்பினும், ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததால் டிராபிக் அவ்வளவு ஈஸியாக சீராகவில்லை. ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்திலேயே நகர்ந்து செல்கிறது. போக்குவரத்து முழுமையாகச் சீராக இன்னுமே சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications