தவெக + அதிமுக.. கூட்டணி ஆட்சியை விரும்பும் அமித்ஷா.. ஆளுநர் மூலம் ஆடும் விளையாட்டின் பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் தவெக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி ஆட்சியே அமைய வேண்டும் என்று அமித்ஷா விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தவெக உடன் காங்கிரஸ் கட்சி இணைந்திருப்பது தேசிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று அமித்ஷா கருதுவதால், ஆளுநர் மூலமாக டெல்லி அரசியல் ஆட்டத்தை ஆட தொடங்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழ்நாட்டில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்கிறது. 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. தவெக பெரும்பான்மையை எட்ட 106 எம்எல்ஏ-க்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், திமுக தாங்கள் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம் என்று அறிவித்துவிட்டது.

ஆனால் அதிமுக எம்எல்ஏ-க்கள் திடீரென புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தவெக தரப்பில் அதிமுகவிடம் ஆதரவு கேட்கப்பட்டது. ஆனால் அதிமுகவின் மெகா டிமாண்ட் காரணமாக தவெக பின் வாங்கிட்டது. இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று விஜய் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து கொள்ள முடியும் என்று விஜய் நம்புவதால், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் தேவை என்று ஆளுநர் பதவியேற்பு விழாவை நடத்த முன் வரவில்லை. இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆளுநர் செயல்பாடுகளுக்கு பின்னணியில் டெல்லி பாஜக இருப்பதாக பார்க்கப்படுகிறது. தவெக பக்கம் காங்கிரஸ் கட்சி சென்றது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். 2029 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சில தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரியாது என்று பாஜக போட்ட கணக்கு மாறியதால், பாஜக ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பாஜக தனது பிடியை அதிமுக மூலமாக இறுக்க ஆயத்தமாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் மூலமாக விளையாட்டை தொடங்கி இருக்கிறது. இதனால் அதிமுகவை நாட வேண்டிய சூழலுக்கு தவெக தள்ளப்படும் பட்சத்தில், எளிதாக தமிழ்நாட்டில் பாஜக தங்களுக்கு சாதகமாக சூழலை உருவாக்க முடியும் என்று கருதுவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications