அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான இன்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதானே! "குழப்பிய" அமித்ஷா
சென்னை: இன்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான். அதனால்தான் அவர் என்னுடன் அமர்ந்திருக்கிறார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து பேசப்பட்ட நிலையில் சென்னை கிண்டி ஐடிசி ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அப்போது இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். நடுவில் அமித்ஷா அவருக்கு வலது புறம் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, இடதுபுறம் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் அமர்ந்திருந்தனர்.
அதிமுக- பாஜக கூட்டணி
அப்போது அதிமுக- பாஜக கூட்டணி அமித்ஷா உறுதி செய்தார். தமிழகத்தை பொருத்தமட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்தார்.
அமித்ஷா
இதையடுத்து நிருபர்களின் கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், அண்ணாமலை மாற்றத்திற்கு பிறகுதான் அதிமுகவுடன் கூட்டணி உறுதியானதா என்ற கேள்வி எழுப்பினர்.
இன்றும் அண்ணாமலை
அதற்கு அமித்ஷா, அப்படியெல்லாம் இல்லை. இன்றும் அண்ணாமலைதான் மாநில தலைவர். அதனால்தான் அவர் என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார் என அமித்ஷா தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
பாஜகவுடன் கூட்டணி முறிவு
இதனால் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இதையடுத்து லோக்சபா தேர்தல் வந்த போது மீண்டும் கூட்டணி அமையுமா என எதிர்பார்க்கப்பட்ட போது இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அது போல் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே கூறிவந்தனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்று ஒரு தேர்தலில் கூட அதிமுக வெல்லவில்லை. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அக்கட்சி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி
இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்தது. டெல்லி அதிமுக அலுவலகத்திற்கு செல்வதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, அங்கு அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அப்போதே இவர்களது கூட்டணி வெளிப்பட்டது.
டிமாண்ட்
அப்போது எடப்பாடி பழனிசாமி ஒரு டிமாண்ட் வைத்ததாக சொல்லப்பட்டது. அதாவது பாஜக தலைவராக அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறு ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. அப்படி செய்தால் கூட்டணியை உறுதி செய்து கொள்ளலாம் என எடப்பாடி சொல்லியதாகவும் தெரிகிறது.
எடப்பாடியிடம் அமித்ஷா டிமான்ட்
அது போல் அதிமுகவில் பிரிந்து கிடக்கும் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த அதிமுக என்றால்தான் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என பாஜக கருதுகிறது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க அமித்ஷா, எடப்பாடியிடம் கேட்டதாகவும் சொல்லப்பட்டது.
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்
இந்த சம்பவம் நடந்த இரு வாரங்களில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார் என்ற தகவலை அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும் புதிய தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
விருப்ப மனு
அதற்கேற்ப இன்றைய தினம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான விருப்ப மனு பெறும் நிகழ்வு நடந்தது. இதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுவை அளித்தார். இதனால் அவர் போட்டியின்றி தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழும்
இந்த நிலையில் காலையிலேயே அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை வரை அதாவது அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்படும் வரை காத்திருந்து அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி, கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
யார் வெற்றி
நாளைதான் தமிழக பாஜக தலைவராக யார் வெற்றி பெற்றார்கள் என அறிவிக்கப்பட்டு அவர் நாளை பதவியேற்பார். அதனால் இன்று வரை அண்ணாமலைதான் மாநில தலைவர். அந்த லாஜிக்கை வைத்து அமித்ஷா, அண்ணாமலைதான் இன்றும் தலைவர் என்றார்.












Click it and Unblock the Notifications