அம்மா உணவகத்தில் இனி இலவசம் கட்...சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அம்மா உணவகம்
ஏழை எளியவர்கள், உழைப்பாளிகள், அன்றாடக்காய்ச்சிகள் காலை உணவு இல்லாமல் இருப்பதையும், இரவில் வெறும் வயிற்றில் உறங்குவதையும், மதிய உணவுக்காக வருமானத்தில் பெரும் தொகையை செலவிடுவதை கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது அம்மா உணவகம். சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையால் உருவான இத்திட்டம் ஜெயலலிதா உத்தரவால் விரிவுப்படுத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் பிரபலம்
ஏழை எளிய மக்கள் மிகக்குறைந்த விலையில் மூன்று வேளை வயிறார உண்ணவும், சத்துள்ள கீரை வகைகள், சக்கரை நோயாளிகளுக்கு இரவில் சப்பாத்தி போன்றவையும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. சென்னையில் அரசு மருத்துவமனைகளிலும் கிளைகள் திறக்கப்பட்டு வெளியூரிலிருந்து வரும் நோயாளிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் இந்திய அளவில் பல மாநிலங்கள் பின்பற்றும் ஒன்றாக அம்மா உணவகம் அமைந்தது.

கொரோனாவில் பேருதவி
கொரோனா காலக்கட்டத்தில் வருமானமின்றி ஊரடங்கில் வாடிய மக்களுக்கு பேருதவியாக அம்மா உணவகம் இயங்கியது. கொரோனா காலத்தில் இலவசமாகவும் உணவு வழங்கப்பட்டது.
ஆட்சி மாறினாலும் மாறாத அம்மா உணவகம்
திமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் பெயர் மாறும், மூடப்படும் என்றெல்லாம் ஹேஷ்யங்கள் எழுந்தபோது அதெல்லாம் கிடையாது, அம்மா உணவகம் தொடரும் பெயர் மாற்றம் இல்லை என முதல்வர் அறிவித்தார். அதன்படி அம்மா உணவகம் தொடர்ந்து இயங்கியது.
வடகிழக்கு பருவமழை இலவச உணவு
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடுமையாக மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு இணையாக வெள்ளநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது, இதையடுத்து ஏழை மக்கள் உணவருந்த அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இது பலத்த வரவேற்பை பெற்றது.
இலவசம் இனி இல்லை, கட்டணம் மட்டுமே
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் சென்னை உள்ளிட்ட புறநகரில் மழை குறைந்தது. இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கப்பட்டு வந்ததை இன்று சென்னை மாநகராட்சி நிறுத்தியது. இயல்பு வாழ்க்கை திரும்பியதால் இனி வழக்கம் போல் அம்மா உணவகம் குறைந்த விலையில் 3 வேளை உணவு விற்பனை என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications