மக்களின் கனிவான கவனத்திற்கு.. இன்று அம்மா உணவகங்கள் இயங்கும்.. மூன்று வேளையும் சுடச்சுட சாப்பிடலாம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் சென்னையில் இன்று அம்மா உணவகங்கள் செயல்படும். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை போட்டு தாக்கி வருகிறது. கொரோனா பாதிப்புகள் தினமும் உச்சத்தில் சென்று வருகின்றன. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏழு மாதங்களுக்கு பிறகு.. முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.. முடங்கியது தமிழகம்.. இவையெல்லாம் இயங்கலாம்!
மீண்டும் முழு ஊரடங்கு
கொரோனவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு இந்த வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.அதன்படி சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு நாளை காலை 4 மணி வரை 30 மணி நேரம் அமலில் இருக்கும்.
அம்மா உணவகங்கள் இயங்கும்
இன்று அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எவற்றுக்கும் அனுமதி கிடையாது என்பதால் டீக்கடைகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் சென்னையில் இன்று அம்மா உணவகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்று தெரிகிறது.
மூன்று வேளையும் தரமான உணவு
சென்னையை பொறுத்தவரை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவைச் சாதங்கள், இரவு சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம் என மூன்று வேளைகளிலும் மிகக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்று அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருப்பதால் அம்மா உணவகங்கள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு அறிவுறுத்தல்
அதன்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் இன்று செயல்பட்டு வருகின்றன. இன்று அம்மா உணவகத்துக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்துக்கு சாப்பிட செல்பவர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம் என அனைத்து காலங்களிலும் அம்மா உணவகம் மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முழு ஊரடங்கின்போது அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது குறிப்பித்தக்கது.