கோயம்பேட்டில் விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி தினகரன்... தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேமுதிக, ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது.
தொடக்கத்தில் அதிமுகவுடனேயே தேமுதிக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தியது. இருப்பினும், தேமுதிக கேட்ட அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக இல்லை. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முதலில் அறிவித்தது.
இருப்பினும், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தியது. இதில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது தேமுதிக, அதன்படி அக்கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.இதனையடுத்து தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டன.
இந்த முறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்திக்கவுள்ளார். தேர்தல் பிரசார திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications