சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த கிருஷ்ணா ராதா! அமமுகவை கை கழுவி எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின்னணி!
அமமுகவிலிருந்து வரிசையாக வெளியேறும் முக்கியப் பிரமுகர்கள்.
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று இணைந்திருப்பது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமமுகவில் இருந்தாலும் கூட ''சின்னம்மா சின்னம்மா'' என எப்போதும் சசிகலா புகழ்புராணம் பாடியவர் கிருஷ்ணா ராதா. சசிகலா சிறையில் இருந்த நான்காண்டுகளும் அவருக்கு எண்ணற்ற கடிதங்கள் எழுதி நலம் விசாரித்து வந்தவர் இவர்.
இவரை அமமுகவில் தக்க வைக்க தவறிய டிடிவி தினகரன் மீது சசிகலாவுக்கு வருத்தம் இருப்பினும் கூட, அதை விட கிருஷ்ணா ராதா எடப்பாடி தலைமையை ஏற்றது தான் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

கிருஷ்ணா ராதா
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை பூர்விகமாக கொண்ட கிருஷ்ணா ராதா பெண்கள் தொழில்முனைவோர் சங்கம் நடத்தி வருகிறார். இவரது சங்கத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்களாக இருப்பதால் இவருக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இவரோ சசிகலா மீது கொண்ட அளவுகடந்த பற்றால் அமமுகவில் இணைந்து அக்கட்சியில் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார்.

அதிமுகவுக்கு அழைப்பு
சிறையிலிருந்து வந்த பிறகு சசிகலா ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்வார் என்று எதிர்பார்த்த இவருக்கு அவர் ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கியது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதேபோல் அமமுக கட்சி செயல்பாடுகள் சுணக்கமின்றி இருக்கிறது என்ற வருத்தத்தில் இருந்து வந்திருக்கிறார். இதையறிந்த ஸ்பெஷல் டீம் ஒன்று, அதிமுகவில் இணையுமாறும் தகுதிகுரிய மரியாதை தரப்படும் எனவும் உறுதிகள் கொடுத்திருக்கிறது.

அலட்டிக் கொள்ளாத டிடிவி
ஆரம்பத்தில் யோசித்த இவர், முன்னாள் அமைச்சர் ஒருவரும், அமமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த மயிலாடுதுறை முக்கிய பிரமுகரும் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமியை அவரது சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து அவரது தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துவிட்டார். இவர் அதிமுகவில் இணைந்தது பற்றி டிடிவி தினகரன் அலட்டிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிர்வாகிகள்
கோமல் அன்பரசன், உமாதேவன், கிருஷ்ணா ராதாவை தொடர்ந்து இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் அமமுகவிலிருந்து வரிசையாக வெளியேறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அசைன்மெண்ட்களை மூன்று முன்னாள் அமைச்சர்கள் கவனித்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications