அடகு வெக்க சொத்து இல்லை..பணம் கொடுத்தால்தான் தேர்தலில் போட்டி...தினகரனை மெர்சலாக்கிய நிர்வாகிகள்!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி மேலிடம்தான் செலவு செய்ய வேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உறுதியாக இருப்பதால் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தரப்பு அப்செட்டாகி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் அமமுகவும் தனித்து போட்டியிடும் என அறிவித்து விட்டார் டி.டி.வி. தினகரன்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களை போனில் தொடர்புகொண்டு, அனைத்து பதவிகளுக்கும் நம் கட்சியினரை களமிறக்க வேண்டும். அதற்கான வேட்பாளர் பட்டியலை உடனடி எனக்கு அனுப்பி ஒப்புதலைப் பெற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடைமுறைகளை துவக்குங்கள் என உத்தரவிட்டிருக்கிறார் தினகரன்.

தேர்தலை புறக்கணிக்கலாமே?
ஆனால், மா.செ.க்களோ, தேர்தல் பற்றிய சிந்தனையே நம் கட்சியினருக்கு இல்லை. தேர்தலை புறக்கணிக்கலாம். எப்படியும் திமுக தான் ஜெயிக்கப் போகிறது. இதற்கு எதற்கு நாம் உயிரைக் கொடுத்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என கேட்கிறார்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தினகரனிடம் மா.செ.க்கள் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார் தினகரன்.

தேர்தல்னா தோல்விதான்
உடனே மாவட்ட செயலாளர்களிடம், '' நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. தேர்தல்னா வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தானே வரும். அதற்காக தேர்தலை புறக்கணிக்கலாமா? வேட்பாளர்களை தயார்படுத்துங்கள் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளிடம் அந்தந்த மா.செ.க்கள் விவாதிக்க, எல்லோரும் ஒருமித்த குரலில், தினகரன் சொல்றதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது. தேர்தல்னா வெற்றி தோல்வி சகஜம் தான். ஆனா, நமக்கு தோல்வி மட்டும் தானே கிடைச்சிக்கிட்டு இருக்கு.

பணம் கொடுத்தா போட்டி
சரி அதெல்லாம் விடுங்க. இப்போ எங்கக்கிட்டே தேர்தல் செலவு செய்ய காசு பணம் கிடையாது. அடமானம் வெக்கவோ, விக்கவோ பொருளோ சொத்துக்களோ எதுவும் கிடையாது. அதனால, தேர்தல் செலவுக்கு கட்சி தலைமை பணம் கொடுத்தால் போட்டியிடுவதை பத்தி எங்களுக்கு கவலையில்லை என்று தங்களின் எதார்த்த பொருளாதார நிலையை சொல்லியிருக்கிறார்கள்.

நிர்வாகிகளிடம் ஆர்வம் இல்லையாமே?
இதனை தினகரனிடம் மாவட்ட செயலாளர்கள் சொல்ல, அவர் செம அப்செட்டாம். அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தகுதியான வேட்பாளர்களை நிறுத்துங்கள் ; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். நாமினேசனுக்கு நாட்கள் குறைவாகத்தான் இருக்கு என்று சொல்லியிருக்கிறார் தினகரன். இதனையடுத்து மா.செ.க்கள் சுறுசுறுப்பு காட்டியுள்ளனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகிகளிடம் தான் அந்தளவுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.












Click it and Unblock the Notifications