கூண்டோடு காலி.. டெல்டாவில் சொல்லியடித்த எடப்பாடி! அதிமுகவில் ஐக்கியமான 12 பேர்.. தினகரன் செம ஷாக்!
அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ்ஸை நேரில் சந்தித்து, அதிமுகவில் இணைந்துள்ளனர்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் 'ஆபரேஷன் அமமுக', டெல்டா மாவடட்ங்களில் சூடுபிடித்துள்ளது.
அமமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக நிர்ப்பந்தித்து வருவதாகச் சொல்லப்பட்ட சூழலில், அமமுகவில் இருந்து முக்கிய புள்ளிகளை இழுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அமமுகவின் முக்கிய புள்ளிகளை தன் பக்கம் சேர்த்துவிட்டு, தினகரனை நிர்க்கதியாக்குவதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

அமமுக டூ அதிமுக
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜகவில் இருந்தே முக்கிய பிரமுகர்களை எடப்பாடி பழனிசாமி தம் கட்சிக்கு இழுத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அடுத்தடுத்து தூக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டிடிவி தினகரன், ஈபிஎஸ்ஸை கடுமையாக அட்டாக் செய்து பேசி வந்த நிலையில், அடிமடியிலேயே கை வைத்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்துள்ளார் ஈபிஎஸ்.

அமமுக முக்கிய புள்ளிகள்
அமமுக மாநில இளைஞரணி செயலாளராகவும், அமமுக செய்தி தொடர்பாளராகவும், அமமுகவில் முக்கிய புள்ளியாக இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அமமுக தலைமை நிலைய செயலாளராகவும், மதுரை மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு, பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே உமாதேவனும் அதிமுகவில் இணைந்தார்.

ஆபரேஷன் அமமுக
அவர்களைத் தொடர்ந்து, அமமுக மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், ஓபிஎஸுக்கு ஆதரவளித்து, பாஜக கூட்டணிக்கு தயாராகி வந்தார் டிடிவி தினகரன். இந்த நேரத்தில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. மற்ற மாவட்டங்களிலும், அமமுகவினரை இழுக்கும் ஆபரேஷனை தீவிரப்படுத்த ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூண்டோடு விலகல்
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், வர்த்தகர் அணி, இளைஞர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் பிரிவு, வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அமமுகவில் இருந்து கூண்டோடு விலகி, சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தீவிரம்
சென்னையில் தன்னைச் சந்தித்து அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தாய்க்கழகமான அதிமுகவுக்கு வரவேற்று, வாழ்த்தினார். அப்போது முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், அண்மையில் அதிமுகவில் இணைந்த கோமல் அன்பரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அமமுக நிர்வாகிகளை அதிமுகவுக்கு கொண்டு வர டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கிறதாம்.












Click it and Unblock the Notifications