ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை.. டிடிவி தினகரன் ட்விஸ்ட்.. பாருங்க, இதான் காரணமாம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடப்போவது இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை : அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த காரணத்தால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் கடந்த ஜன.27-ஆம் தேதி அறிவித்தார்.
அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், கடந்த 3-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்து கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வாபஸ் பெறும் முடிவை எடுத்துள்ளது அமமுக.

வேட்பு மனு தாக்கல் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் ஜனவரி 31ஆம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வேட்புமனுதாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றதை தொடர்ந்து நாளை வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 10-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். பிப்ரவரி 10 பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தினகரன் அதிரடி அறிவிப்பு
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

சிவபிரசாத்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் கடந்த ஜனவரி 27-ம் தேதி அறிவித்தார். இதற்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் டிடிவி தினகரன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த சில நாட்களாக சிவபிரசாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தினகரன் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அமமுக போட்டியிடவில்லை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

குக்கர் சின்னம் இல்லை
இது தொடர்பாக கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.

குழப்பம் வேண்டாம்
நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச் சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications