குக்கர் இல்லாட்டி என்னங்க.. எந்த சின்னம் தந்தாலும் அண்ணன் ஜெயிப்பார்.. உற்சாகத்தில் அமமுக
எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் டிடிவி தினகரன் வெற்றி உறுதி என தொண்டர்கள் கூறுகிறார்கள்.
சென்னை: "குக்கர் இல்லாட்டி என்ன, எங்க அண்ணனுக்கு எந்த சின்னம் தந்தாலும் ஜெயிச்சு காட்டுவார்" என்கிறார்கள் அமமுக தொண்டர்கள்.
கட்சி இரண்டாக உடைந்தபோது இரட்டை இலைக்காக அதிமுக, அமமுக என ரெண்டு தரப்பினரும் சண்டை போட்டு கொண்டனர். கடைசியில் பாஜக தலையீட்டால் இரட்டை இலை அதிமுக வசம் சென்றது.
வேற வழியில்லாமல் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். இரட்டை இலை என்ற பலமான முத்திரையை தாண்டி புத்தம் புதிதாக வந்த குக்கர் விசிலடித்து வெற்றி பெற வைத்தது.
அனுமதி மறுப்பு
அதனால் சென்டிமென்டாக இனிமேல் நடக்க உள்ள எல்லா தேர்தல்களிலும் இதே குக்கர் சின்னத்தை பயன்படுத்த விரும்பினார். இதற்காக இந்த சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாகவே ஒதுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். ஆனால் அந்த குக்கருக்கும் இப்போது அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
மிஸ்டர் கூல்
தொடர்ந்து பல விஷயங்களில் சரிவை சந்தித்து வரும் "மிஸ்டர் கூல்" அரசியல்வாதி டிடிவி தினகரன் நிச்சயம் இந்த ஏமாற்றத்தையும் சமாளித்தே மேலே வருவார் என்றே தெரிகிறது. இப்படி குக்கர் சின்னத்தை கோர்ட் தர மறுத்துவிட்டதே என்று அமமுக தரப்பினர் சிலரிடம் நாம் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னதாவது: "
ஆர்.கே.நகர்
"எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தை கேட்டு வாங்கினார் எங்க அண்ணன். சின்னம் தந்த ரெண்டே வாரத்தில் அதை மக்களிடம் பெரிய அளவில் வைரலாக்கி விட்டார். முக்கியமாக ஆர்.கே நகர் முழுக்க அதை கொண்டு போவதற்காக நிறைய முயற்சி எடுத்தார்.
இரட்டை இலை
அந்த ஏரியா முழுக்க குக்கர்களாக இறக்கி விட்டார். இரட்டை இலை என்பது பிரமாண்டமாக இருந்த ஏரியாவையே புதுசின்னமான குக்கர் கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க ஆரம்பித்தது. அதனால்தான் எந்த பக்கம் திரும்பினாலும் குக்கராகவே இருந்தது.
சுப்ரீம் கோர்ட்
இதைதான் எதிர்க்கட்சியாலே பொறுத்துக்க முடியல. இன்னைக்கு சுப்ரீம் கோர்ட் வரை குக்கர் விஷயம் போயிருக்குன்னா அதுகூட எங்களுக்கு வெற்றிதான். இப்போ குக்கர் கிடைக்கலேன்னா என்ன, எந்த சின்னத்தை தந்தாலும் அதை நாடு முழுக்க கொண்டு போய் சேர்ப்பார்" என்கிறார்கள்.