"நம்பிக்கை துரோகம்!" எல்லாருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும்.. பொடி வைத்து பேசும் டிடிவி தினகரன்
சென்னை: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. அங்கு உட்கட்சி விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்கள் அரங்கேறி வருவது அனைவருக்கும் தெரியும்.
இவை எல்லாம் அதிமுகவில் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம் டிடிவி தினகரன் கிருஷ்ணகிரியில் அதிமுக உட்கட்சி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசி உள்ளார்.

அமமுக
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையில் இப்போது பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.

ஒன்றிணைய வேண்டும்
அந்த நிகழ்ச்சியில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், "தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்டும் உண்மையான இயக்கம் அமமுக தான். ஜெயலலிதா கொள்கைகளை நிலைநாட்டவே இந்த கட்சியையே தொடங்கினேன். ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்ட விரும்பும் அனைவரும் அமமுகவில் ஒன்றிணைய வேண்டும்.

நெருங்கி வருகிறது
ஒன்று நிச்சயம் சொல்கிறேன். வரும் காலத்தில் அமமுக நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும். அதில் சந்தேகம் வேண்டாம். இப்போது நயவஞ்சகர்களின் கைகளில் எம்ஜிஆரின் கட்சியும், சின்னமும் சிக்கி உள்ளது. தொண்டர்கள் யாரும் அங்கு விரும்பி இல்லை. எல்லாரும் வேறு வழியில்லாமல் தான் அங்கி சிக்கி உள்ளனர். விரைவில் அந்த தொண்டர்கள் நிச்சயம் அமமுகவை நோக்கி வருவார்கள். அதற்கான காலம் நெருங்கிவிட்டது.

நம்பிக்கை துரோகம்
செய்த தவறுக்கு எல்லோருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும். அதில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள யாரையாவது பிடிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்கள் முயல்கின்றனர். நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டையை ஏற்கனவே அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். விரைவில் எல்லா காட்சியும் மாறும். தொண்டர்கள் அமமுகவை நோக்கி நிச்சயம் திரும்புவார்கள்.












Click it and Unblock the Notifications