"ரிசார்ட் நாயகன்" இசக்கி வீழ்ந்தது இப்படித்தான்.. அதிமுகவில் சேர இவர்தான் முக்கியக் காரணம்!
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனின் போர்ப்படை தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த இசக்சி சுப்பையா இப்போது அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர உள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் அதிமுகவில் சேர்க்கப்பட உள்ளதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சருக்கு பங்கு இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். நெல்லை மாவட்டத்தைச் சேரந்தவர் இசக்கி சுப்பையா. இவர் அமமுக அமைப்புச் செயலாளராக இருந்தார்.
ஜெயலலிதாவால் கண்டெடுக்கப்பட்டு பதவி கொடுக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டவர். ஜெயலலிதாவின் கோபத்தையும் சம்பாதித்தவர். இவர் அமமுகவில் இருந்து விலகி வரும் 6-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

20 ஆயிரம் தொண்டர்கள்
தென்காசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இசக்கி சுப்பையா, நானும் என்னுடன் இருந்தவர்களும் கட்சிக்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து நிற்கிறோம். தினகரனின் செயல்பாடுகள் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளேன். வரும் 6-ம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தென்காசிக்கு வருகிறார்கள். அன்றைக்கு நான் அதிமுகவில் 20 ஆயிரம் ஆதரவாளர்களுடன் இணைகிறேன் என்றார்.

பாதிக்கப்பட்ட இசக்கி
இந்நிலையில் அதிமுகவில் இருந்த போது அரசு ஒப்பந்தங்களை எடுத்து மேற்கொண்டு வந்த இசக்கி சுப்பையா. அமமுகவில் இணைந்த பிறகு பெரிய அளவில் ஒப்பந்த பணிகள் விஷயத்தில் பாதிக்கப்பட்டாராம். அவருக்கு ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட வகையில் தமிழக அரசு சுமார் 52 கோடி பணத்தை வழங்க வேண்டி உள்ளதாம். இந்த பணமும் இதுவரை வழங்கப்படாமல் இருந்தது.

அதிமுகவில் இணைய விருப்பம்
இதற்கிடையே அமமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் களம் கண்டு தேர்தலில் தோற்றுப்போனதால் கவலையில் இருந்தார். இப்படியே போனால் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என நம்பினார். அமமுகவில் இருந்த இசக்கி சுப்பையா அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார். இதற்கிடையே தனது நெருங்கி நண்பரான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவரிடம் அதிமுகவில் இணைய விரும்பும் தகவலை கூறியதாக கூறப்படுகிறது.

இசக்கி சுப்பையா மகிழ்ச்சி
அவரும் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தின் காதுகளுக்கு விஷயத்தை எடுத்துச்சென்றுள்ளார். உடனே ஒகே சொன்ன அவர்கள் வரும் 6ம்தேதி தென்காசியில் இணைப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்கள். இதன்பின்னரே இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைவது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனிடையே 52 கோடி ஒப்பந்த பாக்கியை வைத்தே எடப்பாடி பழனிச்சாமி அமமுகவின் முக்கிய தலைவரான இசக்கி சுப்பையாவை வீழ்த்திவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லிக்கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications