ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023: அதிமுக கூட்டணி வாக்குகளை பங்கு போடுகிறதா அமமுக.. முடிவு நாளை?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக டிடிவி தினகரன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் கடந்த 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்துவிட்டார். இதையடுத்து இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத் தொடரில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனுதாக்கல்
அதன்படி ஜனவரி 31 ஆம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது. மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஏற்கெனவே கடந்த தேர்தலில் இந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி
இதனால் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டும் என திமுகவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக என்ன முடிவு எடுக்கும் என தெரியவில்லை. அது போல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை இருந்து வருவதால் எடப்பாடி பழனிசாமி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் பதிலுக்கு ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை களமிறக்கக் கூடும். இதனால் எப்படியாவது ஓபிஸ்ஸை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

நாம் தமிழர் கட்சி
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தங்களது சார்பில் வேட்பாளரை நிறுத்தும் என கூறியுள்ளது. அது போல் அமமுக நிலைப்பாடு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி செந்தமிழனிடம் கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பார் என செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல்
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமமுக 1,204 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அது போல் தேமுதிகவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து வரும் 23 ஆம் தேதி ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications