அமமுக ஜெயித்தது ஒரே இடம் தான்.. ஆனால் முடித்துவிட்டது திமுகவின் முக்கிய தலை டிஆர்பி ராஜாவை
திருவாரூர்: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் இந்த முறை அமமுக வென்றது ஒரே ஒரு இடம் தான்.. அதுவும் திமுகவின் முக்கிய தலைவர் என்றால் டிஆர்பி ராஜா தான்.. மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து (2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில்) 3 முறை வெற்றி பெற்ற டி.ஆர்.பி.ராஜா இந்த முறை வெற்றிக்கு பக்கத்தில் வந்து தோல்வி அடைந்து உள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
மன்னார்குடி தொகுதியில் மொத்தம் 24 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் :

பதிவானவை: 1,94,100
எஸ்.காமராஜ் (அ.ம.மு.க.): 68,416
டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.): 66,850
ராஜராஜன் (த.வெ.க.): 44,266
பாரதி செல்வன் (நாம் தமிழர்): 8,240
ராசுபிள்ளை (அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்): 949
கோவிந்தராஜ் (தமிழக வாழ்வுரிமை கட்சி): 635
காமராஜ் (பகுஜன் சமாஜ்): 387
பாரதி (புதிய தமிழகம்): 343
நோட்டா: 405
மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், தனக்கு அடுத்தபடியாக வந்த தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை 1,556 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜாவின் தோல்விக்கு தமிழக வெற்றிக் கழகம் முக்கிய காரணமாக இருந்தது என்றாலும், அதையும் தாண்டி தொகுதியில் நிலவிய பல உள்ளூர் பிரச்சினைகளும், அரசியல் மாற்றங்களுமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தவெக காரணம்
த.வெ.க வேட்பாளர் ராஜராஜன் 44,266 வாக்குகளைப் பெற்றுள்ளார். டி.ஆர்.பி. ராஜாவுக்கும், வெற்றி பெற்ற எஸ். காமராஜுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1,556 தான். பொதுவாக, புதிய கட்சிகள் பிரிக்கின்ற வாக்குகள் ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியையே அதிகம் பாதிக்கும். அந்த வகையில், த.வெ.க பிரித்த 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள், திமுகவின் வெற்றி வாய்ப்பை நேரடியாகப் பாதித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை
அ.ம.மு.க - அ.தி.மு.க கூட்டணி பலம்
கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தனித்தனியாகப் போட்டியிட்டன. அப்போது அ.ம.மு.க சுமார் 40,000 வாக்குகளைப் பெற்றது. இந்த முறை எஸ். காமராஜ் அ.தி.மு.க கூட்டணியில் (அ.ம.மு.க வேட்பாளராக) போட்டியிட்டதால், அ.தி.மு.க-வின் பாரம்பரிய வாக்குகளும், அ.ம.மு.க-வின் வாக்குகளும் ஒருங்கிணைந்து அவருக்குப் பெரும் பலத்தைச் சேர்த்தன. இதுவும் டிஆர்பி ராஜாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
திமுக சந்தித்த உள்ளூர் பிரச்சனைகள்
தேர்தலுக்கு முந்தைய கள ஆய்வுகளின்படி, டி.ஆர்.பி. ராஜாவுக்கு எதிராகச் சில முக்கியமான புகார்கள் முன்வைக்கப்பட்டன. அவர் ஒரு அமைச்சராக மாநில அளவில் பிஸியாக இருந்ததால், தொகுதி மக்களைச் சரியாகச் சந்திக்கவில்லை என்றும், அவரைச் சந்திப்பது சாமானியர்களுக்குக் கடினமாக இருந்தது என்றும் ஒரு அதிருப்தி நிலவியது. காவிரி டெல்டா பகுதியான மன்னார்குடியில், பாமினி மற்றும் கோரை ஆறுகளைத் தூர்வாருவதில் தாமதம், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்ற புகார்களை விவசாயிகள் கூறி வந்தனர்.
அதேபோல் நாகப்பட்டினம் - திருச்சி நெடுஞ்சாலையில் முன்மொழியப்பட்ட 'வேளாண் தொழிற்துறை தாழ்வாரம்' திட்டத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாதது, படித்த இளைஞர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் பாமினி ஆற்றில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் திறக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.
செல்வாக்கான அமைச்சர்
ஒட்டுமொத்தமாக பார்த்தால் த.வெ.க பிரித்த வாக்குகள் திமுகவின் வெற்றியைத் தடுத்த முக்கிய காரணி என்றால், தொகுதியில் நிலவிய ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் அதிமுக அமமுக கூட்டணியும் காரணமாகும். டி.ஆர்.பி. ராஜாவை பொறுத்தவரை மிகவும் செல்வாக்கான அமைச்சர், வெறும் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதற்கு தவெக முக்கிய காரணமாக இருந்திருப்பதை திமுகவினரால் ஜீரணிக்கமுடியவில்லை. பலரும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications