அதி வேகமாக கரையும் அமமுக.. நேற்று சசிரேகா.. இன்று இஷிகா.. நாளை யாரோ??
அமமுகவில் செயல்பட்டு வந்த இஷிகா இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்
சென்னை: அமமுகவின் மகளிர் பிரிவும் கரைந்து காணாமல் போய் கொண்டிருக்கிறது. அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த இஷிகா இன்று அதிமுகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டுள்ளார்.
பொதுவாக, கட்சிகளில் மகளிர் பிரிவு என்று இருக்கும். ஆனால் ஐடி விங் என்ற புதிய அமைப்பு மகளிர் பிரிவில் ஏற்படுத்தினார் டிடிவி தினகரன்.
அதாவது சோஷியல் மீடியா மூலமாக அமமுகவின் செய்தி, தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் இந்த ஐடி விங்கில் பணியாற்றுபவர்களின் முக்கிய வேலை. அதன்படியே நியமிக்கப்பட்டவர்தான் இஷிகா என்பவரும். இவர் தினகரனின் உதவியாளரான ஜனார்தனனின் உறவினர் என்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்!
அமமுகவில் இஷிகா சிறப்பாகவே செயல்பட்டார். குக்கரும், தொப்பியும் கிடைக்காத நிலையில் பரிசு பெட்டி சின்னத்தை ஒரே நாளில் பெருமளவு மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் இஷிகாவின் பங்கு நிறையவே உள்ளது.
"எங்கள் தலைவரின் செயல்பாடுகளால்தான் பரிசு பெட்டி மக்களை சென்றடைந்து இருக்கிறது" என்று இறுமாப்புடன் அன்று சொன்ன இஷிகா.. இன்று அதிமுகவுக்கு தாவி உள்ளார். இன்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டுள்ளார். கடந்த வாரம் அமமுகவின் செய்தி தொடர்பாளர் சசிரேகா அதிமுகவில் இணைய, மறுநாளே அவருக்கு புதிய பொறுப்பை தந்து அழகு பார்த்தது அதிமுக தலைமை.
தற்போது இஷிகாவும் அதிமுகவில் இணைந்துள்ளதால், எப்படியும் இவருக்கும் முக்கிய பொறுப்பினை அதிமுக தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சசிரேகா.. இன்று இஷிகா.. நாளை யாரோ?!