நாளை முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தால் உடனடியாக பதிவேற்றம்.. அமுதா ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கி உள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாளை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்களின் மனுக்களைப் பெற்று, அரசு சேவைகளை உரிய நேரத்தில் வழங்குவதே இதன் முக்கிய இலக்கு என்று அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா, தமிழக அரசின் செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள, 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.
அப்போது பேசிய அமுதா ஐஏஎஸ், "மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வதுதான் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் நோக்கம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளார். இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம், நகரங்களில் 43 சேவைகளும், கிராமங்களில் 46 சேவைகளும் 13-15 அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதாரணமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை காண விண்ணப்பங்களும் வழங்கப்படும் தகுதியானவர்கள் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்புற பகுதியளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் என நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
முன்பு 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது. இப்போது பத்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் என முகாம்களின் எண்ணிக்கையை அப்படியே இரட்டிப்பாக்கி உள்ளோம். முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்தில் நான்கு நாள்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. மக்களின் குறைகளை கேட்டறிய 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
மக்கள் அதிகமாக கூடுகிற வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம். மக்களுக்கு நாம் முகம் நடத்துவது தெரியப்படுத்த முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்ட முகாம் நடத்த உள்ளோம். இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம், மக்களுக்கும் அரசுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி, குறைகளை விரைவாகத் தீர்க்க உதவுகிறது. முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இது செயல்படுவதால், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர். முதற்கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளன.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம், 2021 ஆம் ஆண்டு முதல்வர் அறிவித்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் விரிவாக்கம். இதன் மூலம், முதல் 100 நாட்களில் 2.3 லட்சம் மனுக்கள் தீர்க்கப்பட்டன. இந்த முயற்சி, தமிழ்நாட்டில் மக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
திட்டத்தின் கீழ், இதுவரை 1.5 கோடி மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 1 கோடி மனுக்களுக்கு, அதாவது 95% மனுக்களுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, 2,344 ஊரக முகாம்கள் மூலம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், மக்கள் தங்கள் பிரச்சனைகளை மனுவாக அளித்து, அரசின் உதவிகளைப் பெற முடியும் என்று அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications