"அண்ணாமலையை பாராட்டிய நீதிபதி சுவாமிநாதன்! பதவி விலக நடவடிக்கை எடுக்கணும்!" தலைமை நீதிபதியிடம் மனு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் ராஜினாமா செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியாக உள்ளவர் சுவாமிநாதன். சமீபத்தில் பாஸ்போர்ட் தொடர்பான வழக்கின் உத்தரவில் நீதிபதி சுவாமிநாதன் பாஜக தலைவர் அண்ணாமலையைப் பாராட்டி இருந்தார்.
இதனிடையே நீதிபதி சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளார்.

மனு
ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த கு. பாரதி என்பவர் பதிவாளர் ஜெனரல் மூலம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இந்த மனுவை அளித்துள்ளார். அதில் அவர், "நேற்று (ஜூலை 27) நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த வழக்கில் மனுதாரர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு இரண்டாவது பிரதிவாதியான கியூ பிராஞ்ச் போலீசாரும் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

பாராட்டு
நீதிபதி இந்த ரிட் மனுவுக்கு அனுமதியை மட்டும் அளிக்காமல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த உத்தரவில், 4வது பத்தியில், போலி பாஸ்போர்ட் குறித்துக் கூறியிருக்கிறார். இதே பிரச்சினையை மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரிய அளவில் எழுப்பியதாக செய்தித்தாள்களில் படித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 6வது பத்தியில், இந்த பிரச்சினையை முன்னெடுத்த அண்ணாமலைக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அண்ணாமலை ஜனநாயகத்தில் காவலராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தரமானது
நீதித்துறை ஒரு சுதந்திரமான அரசு அமைப்பாகும். இது எந்தக் கட்சி அல்லது தலைவருக்கு ஆதரவாக இருக்க முடியாது. நீதித்துறை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் ஜனநாயகத்தை நிலைநிறுத்திச் செயல்பட வேண்டும் ஆனால், இந்த உத்தரவில் பாஜக மாநில தலைவரை நீதிபதி பாராட்டி உள்ளார். இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிரானது, இது ஜனநாயகத்திற்கும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாகும்.

பதவிப் பிரமாணத்துக்கு எதிரானது
இந்த கருத்து ஊடகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. எந்தவொரு தனிப்பட்ட நபரும் எந்தவொரு கட்சியையும் அல்லது தலைவரையும் பாராட்டி அறிக்கை கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், உயர் பதவியில் இருக்கும் நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவில் இப்படிக் கூறக் கூடாது. எந்த வகையிலும் அவரது உத்தரவு குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால் அரசியல் கட்சித் தலைவரைப் பெயர் சொல்லிப் புகழ்ந்துள்ளது அவருடைய பதவிப் பிரமாணத்துக்கு எதிரானது.

நடவடிக்கை தேவை
இந்த உத்தரவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளை எழுப்பவோ, ஆளும் பாஜகவுக்கு எதிராக ஜனநாயக பிரச்சினையை எழுப்பவோ விரும்பும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, அவர் நீதிபதியாக நீடிப்பது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.சுவாமிநாதன் பதவி விலகுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்குமாறு தலைமை நீதிபதியைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications