உயிர் பெறும் அடையாறு நதி.. பட்ஜெட்டில் ரூ.1500 கோடி... நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
சென்னை: அடையாறு நதி ரூ.1500 கோடியில் சீரமைக்கப்படும் என்றும் 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறு சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடை பாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை- 2 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ.430 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
கடந்த ஆண்டு 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதிநிலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications