மின்சார வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இ சேவை மையத்திற்கே போக வேண்டாமே!
சென்னை: தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக புதிய கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிய போது உயிரிழந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மொத்தம் 2,731 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் எளிதில் பயன் பெறும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அப்போது ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சார, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்பி தயாநிதி மாறன், எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செயலி வாயிலாக மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களது மருத்துவக் காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாதாந்திர ஓய்வூதிய விவரம், வருடாந்திர ஓய்வூதிய அட்டவணை, வருமான வரி செலுத்துபவர்களுக்கான படிவம் 10 பதிவிறக்கம் உள்ளிட்டவை இந்த செயலியில் உள்ளன. மேலும் இந்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற ஆதார் எண்ணை கேஒய்சி வாயிலாக இந்தச் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications