மோதலாம் வா! ஒலிம்பியாட்டுக்கு ஆடியன்ஸாக வந்து.. கிராண்ட் மாஸ்டரையே வீழ்த்திய 7 வயது அரியலூர் சிறுமி!
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆடியன்ஸாக வந்த அரியலூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் அங்கு இருந்த கிராண்ட் மாஸ்டரையே வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சென்னையில் நடந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த 6 அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றன.
ஆனால் நேற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய பி அணி தோல்வி அடைந்தது. இந்திய பி அணி மீது இந்த தொடரில் அதிக எதிர்ப்பு உள்ளது.
ஆனால் நேற்று நடந்த போட்டியில் இந்திய பி முதல்முறையாக தோல்வி அடைந்தது. நேற்று நடந்த தொடரை காண ரசிகர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
அரியலூர் சிறுமி
இந்த தொடரை காண அரியலூரை சேர்ந்த ஷர்வானிகா என்ற சிறுமி நேற்று ஒலிம்பியாட் மைதானத்திற்கு வந்து இருந்தார். இவருக்கு 7 வயதுதான் ஆகிறது. அப்போது செஸ் போட்டிகளை முடித்துவிட்டு போஸ்வானாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் அங்கிருந்த பார்வையாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். நிகழ்ச்சிக்கு வந்து இருந்த பார்வையாளர்கள் அங்கு செஸ் விளையாடுவதற்காக போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த போர்டுகளில் பலர் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
என்னுடன் ஆட ரெடியா?
அங்கு சென்ற கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் என்னுடன் ஆட யாரும் தயாரா என்று கேட்டார். சவால் விடுவது போல நட்பாக யாராவது ஆட இருக்கிறீர்களா என்று கேட்டார். அப்போது அரியலூரை சேர்ந்த ஷர்வானிகா நான் ஆடட்டுமா என்று கேட்டார். உடனே கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் வா மோதி பார்க்கலாம் என்று அந்த சிறுமியை அழைத்து விளையாட சொன்னார். இவர்கள் சில நிமிடங்கள் அங்கு செஸ் ஆடினார்கள். இதை அங்கு சுற்றி நின்று மக்கள் வேடிக்கை பார்த்தனர்,
கிராண்ட் மாஸ்டர்
நேரம் செல்ல செல்ல அங்கு மக்கள் பலர் கூடினார்கள். கிராண்ட் மாஸ்டர் உடன் சிறுமி விளையாடுகிறார் என்று தெரிந்ததும் பலர் அங்கே வந்து பார்க்க தொடங்கினர். அதோடு அந்த சிறுமிக்கு பலரும் உற்சாக மூட்டினர். இறுதியில் அந்த சிறுமி கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். குறைந்த மூவ்களில் டிங்க்வென்னை அந்த சிறுமி வீழ்த்தினார். இதையடுத்து சிறுமி ஷர்வானிகாவை அந்த கிராண்ட் மாஸ்டரும் பாராட்டினார்.
வெற்றி
சிறுமியை தூக்கி.. நீ ரொம்ப சூப்பரா ஆடுற.. நல்ல எதிர்காலம் இருக்கு உனக்கு என்று பாராட்டினார். அந்த சிறுமி ஆசிய அளவிலான செஸ் போட்டிக்கு இந்தியா சார்பாக தேர்வாகி உள்ளார். அந்த சிறுமிக்கு சிறு வயதில் இருந்தே செஸ் போட்டிகள் என்றால் ஆர்வம். இந்த நிலையில் ஆசிய போட்டிகளுக்கு செல்ல நிதி உதவி வேண்டி இருக்கிறார் அந்த சிறுமி. அரசின் உதவி கிடைத்தால் வெளிநாட்டு போட்டிகளுக்கு பயணம் மேற்கொள்வோம் என்று அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.