“கடவுளுக்கு கிட்னி trouble வருமா?” கருணாநிதி வைரல் வீடியோ! மோடிக்கு சரியான பதிலடி?
சென்னை: மோடியின் பேச்சுக்குப் பதிலடி தரும் வகையில் கருணாநிதியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தன்னை கடவுள் என்று அழைத்த தொண்டர்களை எச்சரித்து கருணாநிதி பேசியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் களம் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், 'நான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்’ என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, “எனது அம்மா உயிருடன் இருக்கும்வரை இந்த உலகத்திற்கு அவர் மூலந்தான் நான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன்.
ஆனால், என் தாயாரின் மரணத்திற்குப் பிறகு நான் பல விசயங்களைச் சிந்தித்துப் பார்த்தேன். என்னை இந்த உலகத்திற்கு அனுப்பியது பரமாத்மாதான். நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பே இல்லை” என்று பேசி இருந்தார்” என்று சொல்லி இருந்தார்.
தன்னை கடவுளின் அவதாரம் என மோடி முன்வைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். பலரும் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனத்தை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.

'ராமரை வைத்து அரசியல் செய்த மோடி, இப்போது தன்னையே ராமர் அவதாரம்’ என்று சொல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.
குறிப்பாக திமுகவினர் மோடியின் இந்தப் பேச்சை விமர்சித்து வருவதைப் பரவலாகக் காண முடிகிறது. அதன் தொடர்ச்சியாக திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பேசிய பழைய பேச்சு ஒன்றைச் சுட்டிக்காட்டி மோடிக்குப் பதிலடி தந்தும் வருகின்றனர்.
பொதுவாக திராவிடர் கழகத்தின் பின்னணியிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய கருணாநிதி, கடவுள் மீதான மூடத்தனங்களைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருந்துள்ளார்.
அவர் வசனம் எழுதிய 'பராசக்தி’யில் கூட 'எந்தக் காலத்திலடா அம்பாள் பேசினாள்’ என்று எழுதியிருப்பார். அதேபோல் சேது கால்வாய் திட்டத்தின் போது ராமர் பாலம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தது. அப்போது கருணாநிதி, 'ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்’ என்று கேட்டிருந்தார்.
அதற்கு இந்தியா முழுக்க இருந்து கடும் கண்டனங்களைச் சாமியார்கள் வைத்தனர். அவரது தலைகூட விலை பேசப்பட்டது.
அதேபோல் கும்பகோணத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் திமுக தொண்டர் ஒருவர், கருணாநிதியை 'இதய தெய்வம்’ என்று அன்பாக அழைக்கப் போக அதற்கு மிகக் கிண்டலாக அறிவுரைகளை வழங்கும் பாணியில் பேசியுள்ளார் கருணாநிதி.
’இதய தெய்வம்’ என்பது எம்.ஜி.ஆரை அந்தக் காலத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அன்பாக அழைத்து வந்தனர். அதற்கு ஒரு பதிலடியாகவும் கருணாநிதியின் பேச்சு அமைந்துள்ளது.

இந்தப் பேச்சு இப்போது மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்று சொன்னதற்கு மறுப்பாக முன்வைக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
1986 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மருத்துவமனை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேச்சை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அதில், கருணாநிதி அவருக்கே உரியக் கிண்டலான தொனியில் பல விசயங்களைப் பேசி இருக்கிறார். அதில் ஹைலைட் ஆக 'கடவுளுக்கு கிட்னி பிராப்லம் வருமா?’ என அவர் கேட்கும்போது பலரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றார்கள்.
தனது பேச்சில் மு.கருணாநிதி, “தம்பி பத்மநாபன் இங்கே பேசும் போது என்னை 'தெய்வம், இதய தெய்வம்’ என்றெல்லாம் குறிப்பிட்டார். நான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். என்னைத் தெய்வம் என்று சொல்லி தெய்வத்தை இழிவுபடுத்தாதீர்கள், என்னையும் கேலி செய்யாதீர்கள்.
இப்போதுகூட நான் 5 அல்லது 6 நாள்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு கடுமையான உடம்பு வலியோடுதான் நின்று கொண்டிருக்கிறேன். தெய்வத்திற்கு உடம்பு வலி வருமா? தெய்வத்திற்குத் தலைவலி, கால் வலி, கண் வலி இவை எல்லாம் வருமா? தெய்வத்திற்கு Heart trouble வருமா? தெய்வத்திற்கு கிட்னி trouble வருமா?” என்று அவர் பேசப் பேசக் கர ஒலி காதை கிழிக்கிறது. கைதட்டல் அரங்கத்தை அதிரச் செய்கிறது.
இதனிடையே தொடர்ந்து பேசியுள்ள மு.கருணாநிதி, “எனவே என்னைத் தெய்வம் என்று சொல்லி தெய்வத்தை இழிவுபடுத்தாதீர்கள். அதைப்போலவே என்னையும் கேலி பேசாதீர்கள்.
தெய்வம் பேசாது; நான் பேசுகிறேன். எனவே நமது கழக உடன்பிறப்புகள், இந்த இதய தெய்வம், தெய்வம் என்று எல்லாம் என்று என்னை அழைப்பதை விட்டுவிட வேண்டும். உங்களின் அன்பையும் பாசத்தையும் வேறு விதத்தில் பொழிந்தால் போதுமானது.
என்னைத் தெய்வமாக்கிவிடாதீர்கள். நாம் தெய்வத்தை ஏற்றுக் கொள்கிறோமா? இல்லையா? என்பதைவிடத் தெய்வம் நம்மை ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும். உண்மைக்கும், மனசாட்சிக்கும் ஏற்ற வகையிலே நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications