தாம்பரம் ரேகா.. தாசில்தார் ஆபிஸ் முன்னாடியே.. ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை
சென்னை: சென்னை தாம்பரம் தாசில்தார் ஆபிஸ் முன்பு பெட்டிக்கடை வைத்திருந்த ரேகாவிற்கு அப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. ஒரே நாளில் வாழ்க்கையே தலைகீழாக மாறி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையில் மிகவும் நெரிசலான பகுதிகள் நிறையவே உள்ளது. அதில் மிக முக்கியமானது ஜிஎஸ்டி சாலை தான். ஆலந்தூர் தொடங்கி அப்படியே விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு வரை நெரிசல் இருக்கும்.

இதில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் வரை வரை காலை மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் இருக்கும். மழை பெய்யும் போது இந்த பகுதியில் வந்தால், வாகன ஓட்டிகள் நிலை அதோகதி தான். அந்த அளவிற்கு நெரிசல் ஏற்படும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அரசு இங்கு ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை துளியும் அனுமதிக்காது. வெகுசிலரே தள்ளுவண்டிக்கடை மற்றும் பெட்டிக்டைகள் வைத்துள்ளார்கள். வாகனங்களை நிறுத்திவிட்டு டிராபிக் ஜாம் செய்தால், வண்டி அடுத்த நிமிடமே போலீஸ் ஸ்டேசனுக்கு போய்விடும். டோவ் போட்டு அலேக்காக தூக்கி கொண்டு போய்விடுவார்கள்.. மிகவும் சிக்கலான பகுதி என்றால் அது ஜிஎஸ்டி சாலை தான்.
இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ அன்பரசன் உத்தரவிட்டார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் இதற்காக ஆலோசனை நடத்திய அமைச்சர் தா.மோ அன்பரசன், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், பெரிய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இரும்புலியூர் மேம்பாலம் பகுதியில் இருந்து பல்லாவரம் வரை சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் தான் சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ரேகாவின் பெட்டிக்கடையும் அகற்றப்பட்டுள்ளது. தாம்பரம் ரேகா, கடந்த ஜந்து வருடங்களாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகில் சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்த அதிகாரிகள், ஜே.சி.பி இயந்திரத்துடன் தான் தினமும் சுற்றுகிறார்கள். காவல் துறை பாதுகாப்புடன் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் தாம்பரம் வட்டாசியர் அலுவலகம் அருகே இருந்த ரேக்காவின் பெட்டிகடையை அகற்ற அதிகாரிகள் வந்தனர். அப்போது அவர், "எனக்கு முன்கூட்டியே எந்தவொரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை" என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அப்போது தனது பெட்டிக்கடையில் உள்ள பொருட்களை வாகனம் மூலம் அப்புறப்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ரேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் சிறிது நேரம்கூட காலஅவகாசம் கொடுக்காமல் ரேகா கண்முன்னே அவரது பெட்டிக் கடையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தள்ளிவிட்டார்களாம்.
இதேபோன்று அதன் அருகே மேலும் இரண்டு பெட்டிக்கடைகளையும் அவகாசம் கொடுக்காமல், இடித்து தள்ளிவிட்டதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது மக்கள் குற்றம்சாட்டினார்கள். பாதிக்கபட்ட பெட்டிக் கடைகாரார்கள் தங்களுக்கு வாழ்வாதரமாக இருந்த இந்த கடையை அகற்றியதால், வாழ்வதாரம் இழந்து தவிக்கிறோம். எங்களுக்கு சரியான இடம் ஒதுக்கி மீண்டும் புதிய கடை அமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.












Click it and Unblock the Notifications