புதிய உச்சத்தில் தங்கம் விலை.. கொஞ்சமாவது குறைய வாய்ப்பு இருக்கா.. கூலாக விளக்கும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. கொரோனா சமயம் உச்சம் தொட்ட தங்கம் பிறகுச் சற்று விலை குறைந்தது. இப்போது மீண்டும் அது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே வரும் நாட்களில் தங்கம் விலை குறையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கா.. அப்படியே குறைந்தாலும் எந்தளவுக்குக் குறையலாம் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி உள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது சமீபத்திய வீடியோவில், "தங்கம் ரூ.6600 தாண்டி விற்பனையாகி வருகிறது. இதில் நீங்கள் செய் கூலி மற்றும் தேசாரததை சேர்த்தீர்கள் என்றால் அசால்டாக 7000 ரூபாயைத் தொட்டுவிடும். இது 22 கேரட் தங்கம். அதேபோல 24 கேரட் தங்கம் என் பார்த்தோம் என்றால் அது ரூ 7,500ஐ தாண்டிவிட்டது. எனவே, இது அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் தங்கம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.
காரணம் ஒன்று:இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம் சர்வதேச சந்தை.. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டியைக் குறைப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
அதேபோல சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் அமெரிக்கப் பத்திரங்களை விற்று அதற்குப் பதிலாகத் தங்கத்தை வாங்குகிறார்கள். தங்கத்தை இந்த நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளாகப் பார்க்கிறார்கள். அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துகளுக்குத் தடை விதித்து விட்டன. இதன் காரணமாக அமெரிக்கப் பத்திரங்களைத் தொடர்ந்து விற்று, தங்கத்தை வாங்கி வருகிறார்கள். தங்கம் இவ்வளவு சீக்கிரம் விலை அதிகரிக்க இதுவே முக்கிய காரணம்.
அமெரிக்க மத்திய வங்கி: அமெரிக்கா மத்திய வங்கி இந்தாண்டு வட்டி விகிதத்தைக் குறைப்பது சந்தேகமே.. ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரவில்லை.
ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்தால் உங்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா சீனாவை எச்சரித்து இருக்கிறது. எனவே, புவிசார் அரசியல் பதற்றமாகவே இருக்கிறது. ரஷ்யா, சீனா, துருக்கி ஒரு பக்கமும், அமெரிக்கா அதன் நட்பு நாடுகளும் மறு பக்கம் என புவிசார் அரசியல் பிளவுபட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பதிலும் குழப்பம் இருப்பதால் அனைத்தும் சேர்த்து தங்கத்தில் விலை உயரக் காரணமாக இருக்கிறது.
மதில் மேல் பூனை: அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போலத் தங்கம் விலை அதிகரிக்கும். அதேநேரம் வட்டி விகிதம் குறையும். அதேநேரம் எந்தளவுக்குத் தங்கம் விலை குறையும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாது.
இப்போது தங்கம் விலை மதில் மேல் பூனையாக இருக்கிறது. அதேநேரம் தங்கம் விலை குறைந்தாலும் கூட அது மீண்டும் ரூ.5100 எல்லாம் நிச்சயம் வராது. மீண்டும் ரூ.5800க்கு கூட வராது.
அடுத்த காரணம்: இரண்டாவது காரணம் மத்திய அரசின் முடிவு.. தங்கத்திற்கு இப்போது 15% வரி போட்டுள்ளார்கள். அதில் 3% ஜிஎஸ்டி, மீதி கஸ்டம் டியூட்டி மற்றும் செஸ் வரி ஆகும். தங்கத்தின் மீதான வரியைக் குறைத்தால் நாமும் குறைந்த விலையில் தங்கத்தை வாங்க முடியும். உதாரணத்திற்குச் சொல்கிறேன்.. தங்கத்தின் விலை ரூ.7000 என்றால் அதில் ரூ.1500 வரியாகவே செலுத்த வேண்டி இருக்கிறது. 3%ஆக இருந்த வரியை 15%ஆக உயர்த்தி உள்ளனர். இரண்டாவது காரணம் இந்த வரி தான்.
3ஆவது காரணம்: மூன்றாவது காரணம் இந்தியா ரூபாய் மதிப்பு. 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.56ஆக இருந்தது. ஒரு 15 மாதங்களுக்கு முன்பு ரூ.70-71ஆக இருந்தது. இப்போது அது ரூ.84ஐ நெருங்கிவிட்டது. ரூபாய் மதிப்பு குறையாமல் வைத்து இருந்தால் தங்கம் விலை இந்தளவுக்கு அதிகரித்து இருக்காது.
அதாவது அமெரிக்கா வட்டி விகிதம், தங்கம் மீதான வரி, அடுத்து முக்கியமாக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவை சேர்ந்து தான் தங்கத்தின் விலை இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications