தீபாவளி வரை தான் டைம்.. தங்கம் விலை ரூ.8000ஐ தொடும்! நாலே வரியில் காரணத்தை விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகச் சீராக அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் அது மின்னல் வேகத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். வரும் தீபாவளிக்குள் தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பதை விளக்கிய அவர், அடுத்தாண்டு எந்தளவுக்கு உயரும் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்றைய தினம் ரூ. 6,875க்கு இருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.100 வரை உயர்ந்துள்ளது.

இதற்கிடையே வரும் காலத்திலும் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஆனந்த் சீனிவாசன், எந்தளவுக்கு அது உயரும் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அடுத்த 18 மாதங்கள்: இது குறித்து அவர் தனது வீடியோவில், "உலகின் எல்லா செல்வங்களும் சற்று சரிந்த நிலையில், நேற்றைய தினம் நமது நாட்டிலும் தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்றைய தினம் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்தது. சந்தையில் எப்போதும் குறைந்தபட்ச விலையைப் பிடிக்க முடியாது. அதேபோல அதிகபட்ச விலையையும் யாராலும் சரியாகப் பிடிக்க முடியாது. எனவே, உங்களுக்கு அடுத்த 18 மாதங்களில் உங்களுக்குத் தங்கம் தேவை என்றால இப்போது வாங்குவதே சரியான முடிவு" என்றார்.
அதேபோல மற்றொரு வீடியோவில் அவர், "22 கேரட் தங்கம் ஒரு கிராம் இப்போது ரூ.6900 கிட்ட இருக்கிறது. இத்துடன் ஜிஎஸ்டி, மேலும் செய்கூலி எல்லாம் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்கத்தை ராக்கெட் லான்சிங் பேட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அமெரிக்காவைப் பொறுத்து மிக விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.7000ஐ தொட வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
ஹால்மார்க் கதை: இப்போது ஒரே நேஷன் ஒரே விலை குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது நாட்டில் எங்குத் தங்கம் வாங்கினாலும் ஒரே விலை இருப்பதே. இந்த திட்டம் முன்பு ஹால்மார்க் திட்டமும் இப்படி நாடு முழுக்க கொண்டு வந்தார்கள். அந்த ஹால்மார்க் எப்படி வந்தது என்ற கதை சற்று வித்தியாசமானது. முதலில் கேரட்மீட்டர் என்ற கருவியை டாடா தான் தனது கடைகளில் கொண்டு வந்தார்கள்.
அவர்கள் சந்தையைப் பிடித்ததே இப்படி தான். நமது மக்களிடம் நீங்கள் உங்கள் தங்கத்தைக் கொண்டு வந்து வையுங்கள்.. எவ்வளவு தங்கம் இருக்கிறது.. எவ்வளவு மற்ற உலோகங்கள் இருக்கிறது என்ற உண்மையைச் சொல்லிவிடும் என்றார்கள். மக்கள் எல்லாரும் தங்கத்தைக் கொண்டு வந்து பார்த்தார்கள். அப்போது தான் தங்கள் உள்ளூர் கடைக்காரர்கள் தங்களை ஏமாற்றி இருப்பதை மக்கள் உணர்ந்தார்கள்.
இதை வைத்தே டாடா நிறுவனம் தனது விற்பனையைத் தொடங்கினார்கள். டாடா தனிஷ்க் விற்பனை அதிகரித்தது. அதன் பிறகு அரசே ஹால்மார்க் முறையைக் கொண்டு வந்து அதைக் கட்டாயமாக்கியது. ஹால்மார்க் முறை வந்த பிறகே தங்கத்தின் தரம் நிலையானது.
ஒரே நேஷன் ஒரே விலை: அதேநேரம் தங்கம் விலை இப்போது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ரேட்டில் விற்கப்படுகிறது. மும்பையில் ஒரு விலை.. சென்னையில் ஒரு விலை என்றே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அகில இந்திய ஜூவல்லரி அண்ட் புல்லியன்ஸ் அமைப்பினர் நாடு முழுக்க ஒரே விலையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விலை என்பதை இது நீக்கும். இது வந்துவிட்டால் நாடு முழுக்க ஒரே விலையில் தங்கம் விற்பனையாகும். இது நல்லது" என்று தெரிவித்தார்.
ரூ 8000 வரை செல்லும்: மேலும், சர்வதேச சந்தையில் தங்கம் உயர ஆரம்பித்துவிட்டது என்ற அவர், இதனால் தீபாவளிக்குள் 24 கேரட் தங்கம் ரூ.8000 செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications