அரிதான புற்றுநோய்.. "90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளர்".. ஆனந்த கண்ணன் மரணம்.. என்ன நடந்தது?
சென்னை: 90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான தொகுப்பாளர் என்று அறியப்பட்டவரும், பல்வேறு கிராமப்புற கலைகளை தொடர்ந்து சர்வதேச அளவில் அரங்கேற்றியவருமான ஆனந்த கண்ணன் நேற்றிரவு மரணம் அடைந்தார். மீடியா உலகையும், இவரின் ரசிகர்களையும் இந்த மரணம் உலுக்கி உள்ளது. இவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் மிக மிக அரிதானது என்பதால் இவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
2000க்கு பின் தொலைக்காட்சிகள் புதிய வடிவம் எடுத்த காலம். எஸ்சிவி என்ற பெயரில் இயங்கி வந்த சேனல் சன் மியூசிக் என்ற புதுப்பொலிவு பெற்று தமிழ் மீடியா உலகில் புரட்சியை ஏற்படுத்திய காலம். பல புதிய விஜேக்கள் தோன்றி பாடல்களை ஒளிபரப்புவது.. பிளேடு தினா, சுரேஷ், மகாலட்சுமி, ஆடம்ஸ், அஞ்சனா என்று பலர் பிரபலம் அடைந்த காலம் அது. அதில் மூத்த விஜேவாக வலம் வந்தவர்தான் ஆனந்த கண்ணன்.
மீடியா உலகின் பிரபலமான விஜேவாக, ஸ்டைலிஷ் நபராக அறியப்பட்டவர். நடிகர் விஜய் தொடங்கி பல்வேறு பிரபலங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் அறியப்பட்டவர். சாதாரண பாடல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி என்றாலும் அதில் இவரின் குறும்புத்தனமான பேச்சு மக்களை அதிகம் கவர்ந்தது. கெரியரில் உச்சத்தில் இருக்கும் போதே சொந்த பிஸ்னஸை கவனிக்க வேண்டும் என்று ஆனந்த கண்ணன் விஜே உலகில் இருந்து வெளியேறினார்.

வெளிநாடு
சிங்கப்பூர் தமிழரான இவர் அங்கு கடந்த சில வருடங்களாக வசித்து வந்தார். தமிழர்களின் கிராமிய கலைகள் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் அங்கு இது தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நிறைய விஜே வாய்ப்புகள் தேடி வந்த போதும் கூட கிராமிய கலை நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க கொண்டு செல்வதில் இவர் ஆர்வமாக இருந்தார். முக்கியமாக சிந்துபாத் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்ததால் நிறைய சீரியல் வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது.

விருப்பம்
ஆனால் அந்த துறைகளில் மீண்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து சிங்கப்பூரில் கலை பணிகளை செய்து வந்தார். அதோடு மேடை நாடகம், நடனம், பறையிசை கலை என்று மற்ற துறைகளிலும் கவனம் செலுத்தினார். சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களுக்கு இது தொடர்பாக பல்வேறு வகுப்புகளையும் இவர் எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஆசன குடல் புற்றுநோய் ஏற்பட்டது.

குடல்
குடலுக்கு அருகே இருக்கும் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் ஆகும் இது. மிக மிக அரிதாக ஏற்படும் இந்த புற்றுநோய் Cholangiocarcinoma அல்லது bile duct cancer என்று அழைக்கப்படுகிறது. இதை குணப்படுத்துவதும், சிகிச்சை அளிப்பதும் மிக மிக கடினமான விஷயம். பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இந்த ஆசன குடல் புற்றுநோய் ஏற்படும் என்றாலும் கூட சமயங்களில் வயது குறைவானவர்களுக்கும் இது ஏற்படுகிறது.

மோசமாகும்
மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் கூட சில சமயங்களில் அறிகுறியே இல்லாமல் மிகப்பெரிய புற்றுநோயாக இது உருவெடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைபிடித்தல், மது தொடங்கி ஜெனிடிக்ஸ் காரணம் வரை பல்வேறு விஷயங்களால் இந்த ஆசன குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கல்லீரல் தொடர்பான நோய்கள் கூட இதை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

வாய்ப்பு
இந்த அரிதான புற்றுநோய் தாக்கிய காரணத்தால்தான் ஆனந்த கண்ணன் பலியாகி இருக்கிறார். இதற்காக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து கேன்சர் இவரின் குடலில் பல்வேறு குழாய்களில் பரவிய நிலையில் இவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூரை சேர்ந்த தொகுப்பாளினி ராணி என்பவரை மணந்து இவருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் இளம் வயதில் இவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications